இலங்கையில் பெட்ரோலிய வர்த்தகத்தில் ஈடுபடுவதற்கு 24 சர்வதேச நிறுவனங்கள் தமது முன்மொழிவுகளை சமர்ப்பித்துள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்தார்.
ஐக்கிய அரபு இராச்சியம், சவுதி அரேபியா, அமெரிக்கா, சீனா, இந்தியா, ரஷ்யா, பிரித்தானியா, மலேசியா, நோர்வே மற்றும் பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகளை சேர்ந்த நிறுவனங்களே முன்மொழிவுகளை சமர்ப்பித்துள்ளன.
இலங்கைக்கு நீண்ட கால அடிப்படையில் பெட்ரோலிய உற்பத்திப் பொருட்களை இறக்குமதி செய்வதற்கும் விநியோகிப்பதற்கும் விற்பனை செய்வதற்கும் பெட்ரோலியம் உற்பத்தி செய்யும் நாடுகளில் உள்ள பிரபல நிறுவனங்களிடம் இருந்து விண்ணப்பங்களை கோரும் வகையில், கடந்த ஜூலை 25 ஆம் திகதி மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சினால் விளம்பரம் வௌியிடப்பட்டிருந்தது.
அதற்கான முன்மொழிவுகளை குறித்த நாடுகளிலுள்ள சர்வதேச நிறுவனங்கள் சமர்ப்பித்துள்ளன.
மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சினால் நியமிக்கப்பட்ட குழு, குறித்த நிறுவனங்களை மதிப்பீடு செய்து, அடுத்த கட்ட செயற்பாடுகளை எதிர்வரும் 6 வாரங்களில் பூர்த்தி செய்யும் என அமைச்சர் கஞ்சன விஜேசேகர குறிப்பிட்டார்.
எங்களது குரூப்பில் இணைந்து உலகில் இடம் பெறுகின்ற முக்கியச் செய்திகளை நம்பகத்தன்மையுடன் அறிந்து கொள்ளுங்கள்...
0 Comments