Trending

6/recent/ticker-posts

Header Ads Widget

இன்றைய சிந்தனை: தப்பெண்ணம் கொள்ளுதல் - இஸ்லாம் கூறுவதென்ன?


அடுத்தவர் பற்றி தப்பெண்ணம் கொள்வது மிக மோசமான ஒரு பழக்கமாகும். 

இது குடும்பங்கள், சமூகங்களிடையே பிரிவினையை ஏற்படுத்திவிடும். செயல்பாடுகளின் தரத்தை குறைத்துவிடும். மனிதர்கள் மீதான நம்பிக்கையை நீக்கிவிடும். 

ஓத்துழைப்புகள் குறைந்துவிடும். குடும்பங்களும் தனிமனிதர்களும் தனித்து விடப்படுவார்கள். சந்தேகங்களும் தப்பபிப்பிராயங்களும் தாண்டவமாடும். ஒருவன் மற்றவனுக்கு எதிராக சதி செய்வான். இது குடும்பம், நிறுவனங்கள், சமூகங்களை பாழாக்கிவிடும். எனவேதான் இஸ்லாம் தப்பெண்ணங்களை தவிர்க்கவும் நல்லெண்ணங்களை உருவாக்கவும் பல வழிமுறைகளைக் காட்டித்தந்திருக்கிறது.

'அல்லாஹ் ஒரு முஃமினின் இரத்தத்தையும், செல்வத்தையும், மானத்தையும், தப்பெண்ணம் கொள்வதையும் ஹராமாக்கியுள்ளான்' என்று இப்னு அப்பாஸ் (ரழி) அவர்கள் கூறியுள்ளார்கள். (ஆதாரம்: ஹாகிம், இஹ்யா உலூமித்தீன் 2/221)

தப்பெண்ணம் என்பது 'யாரை நம்ப வேண்டுமோ அவரை நம்பாதிருப்பதனை குறிக்கும்' என்று இமாம் மாவர்தி (ரஹ்) அவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள். (ஆதாரம் - அதபுத் துன்யாவத் தீன் - 1/186)

அதேநேரம் இமாம் இப்னுல் கையிம் (ரஹ்) அவர்கள் 'மக்களைப் பற்றிய மோசமான எண்ணங்களை உள்ளத்தில் நிரப்பிக்கொள்வது தப்பெண்ணம்' என்றுள்ளார்கள். 
(ஆதாரம் - அர்ரூஹ் 1/238)

இது சமூக வாழ்வில் காணக்கிடைக்கின்ற இஸ்லாம் தடுத்துள்ளவைகளில் ஒன்றாகும். அதாவது இரு நிலைப்பாடுகளுக்கு வர முடியுமான நிலையில் நல்ல பகுதியை விட்டுவிட்டு மோசமான பகுதியை உறுதிப்படுத்துவதுதான் இங்கு இடம்பெறுகிறது.

இவ்வாறானவர்கள் எப்போதும் அடுத்தவர் பற்றி தப்பபிப்பிராயம் கொள்வார்கள். சிறிய காரணங்களுக்காக குற்றம் சுமத்துவார்கள். அடுத்தவர் செயல்களை குறைத்தே மதிப்பிடுவார்கள். சிறிய தவறுகளையும் மிகைப்படுத்தி விடுவார்கள். அடுத்தவரின் நியாயங்களை தேட மாட்டார்கள். 

குறைகளைத் துருவித்துருவி ஆராய்வார்கள். அவற்றை உச்சத்துக்கே கொண்டு செல்வார்கள். அவற்றை பரப்பி விடுவார்கள். அடுத்தவரின் செயல்களைக் கறுப்பு கண்ணாடியணிந்து நோக்குவார்கள். அடுத்தவர் செய்கின்ற நல்ல விடயங்களை குறைத்து கணிப்பார்கள், பல போது மறைத்தும் விடுவார்கள். சிலபோது அவர்களது குறைகளை மிகைப்படுத்திக் காண்பிப்பார்கள். இவர்களது நோக்கமே குறைகாண்பதுதான். அடுத்தவன் மீது குற்றத்தை சுமத்திவிடவே இத்தகையவர்கள் முனைவார்கள்.

ஒரு தவறிலிருந்து ஆயிரக்கணக்கான தவறுகளை உருவாக்கி விடுவார்கள். ஒரு சாதாரண தவறை குப்ராக மாற்றிவிடுவார்கள். ஒரு மனிதனின் சொல்லோ செயலோ அது நல்லதாகவோ கெட்டதாகவோ இருக்கலாம். பிறர் குறைதேடுவோர் அவற்றை ஒரு குற்றமாகவே நோக்குவார்கள். இது இஸ்லாமிய நோக்குக்கு முற்றிலும் முரணானதாகும்.

'விசுவாசிகளே! சந்தேகமான அதிகமான எண்ணங்களிலிருந்து தவிர்ந்து கொள்ளுங்கள். ஏனெனில் சில வகையான எண்ணங்கள் பாவமானவையாகும். (அல் குர்ஆன் - ஹுஜுராத்:12)

இங்கு இரண்டு விடயங்களை கவனத்தில் கொள்ள வேண்டும். முதலாவது, 'தவிர்ந்து கொள்ளுங்கள்' என்பது ஒரு கட்டளையாகும். கட்டளைகள் வாஜிப் என்ற கடமையை குறிக்கும். இரண்டாவது, இவ்வசனத்தை தொடர்ந்து 'நீங்கள் பிறர் குறைகளை துருவித் துருவி ஆராய வேண்டாம்' என்றும் 'சிலர் சிலரைப் பற்றிபுறம் பேச வேண்டாம்' என்று வந்துள்ளமை தப்பெண்ணங்களின் விளைவுகள் எப்படி காணப்படும் என்பதை எடுத்துக்காட்டுகிறது.

ஒரு தடவை நபி (ஸல்) அவர்கள் 'தப்பெண்ணத்தையிட்டு உங்களை நான் எச்சரிக்கிறேன். ஏனெனில் அது மிகவும் பொய்யான பேச்சாகும்' என்று கூறியுள்ளார்கள். (ஆதாரம் - புகாரி, முஸ்லிம்)

நபி (ஸல்) அவர்கள் கஃபாவை பார்த்து 'நீ எவ்வளவு சிறந்தது, உனது காற்று எத்துனை சிறந்தது. நீ எத்துனை மகத்தானது, உனது கண்ணியம் எத்துனை மேலானது. முஹம்மதுடைய உயிர் எவன் வசமுள்ளதோ அவன் மீது ஆணையாக அல்லாஹ்விடம் முஃமினுடைய கண்ணியம், அவனது செல்வம், அவனது இரத்தம், அவனைப் பற்றி நல்லதையே பேசுவது போன்றவை உனது மகத்துவத்தை விட மேலானது' என்று குறிப்பிட்டுள்ளார்கள். (ஆதாரம்: - இப்னு மாஜா, ஸில்ஸிலதுஸ் ஸஹீஹா)

தப்பெண்ணம் என்பதை இரு கோணங்களில் நோக்கலாம். அவற்றில் ஒன்று அல்லாஹ்வை பற்றி தப்பெண்ணம் கொள்ளுதல் மற்றையது மனிதர்களை பற்றி தப்பெண்ணம் கொள்ளுதல் ஆகும். அல்லாஹ் அவனது மார்க்கத்துக்கு உதவி செய்யமாட்டான், அவன் நோயை குணப்படுத்த மாட்டான், பாவங்களை மன்னிக்க மாட்டான், அவனால் அனைத்தையும் அறிந்து கொள்ளவோ மிகைக்கவோ முடியாது போன்ற கருதுதல்கள் முதன்மையான தப்பெண்ணம் ஆகும். இதனை அல்லாஹ் 'அவர்கள் அல்லாஹ் பற்றி தப்பெண்ணம் கொள்கிறார்கள்' (அல் குர்ஆன் - பத்ஹ்: 06) என்று நயவஞ்சகர்களை பற்றி குறிப்பிடுகிறான். இவ்விரு வகையான தப்பெண்ணங்களையும் இஸ்லாம் தடை செய்துள்ளது.

ஷைத்தான் சில விடயங்களை அலங்காரமாக்கி காட்டுவதும், மனோ இச்சையைப் பின்பற்றுவதும், அறிவீனமும் தப்பெண்ணம் கொள்வதற்கான முக்கிய காரணிகளாகும்.

'அல்லாஹ்வின் தூதரும் முஃமின்களும் தமது சமூகத்தை நோக்கி திரும்பி வர மாட்டார்கள் (அவர்கள் அழிந்து விடுவார்கள்) என்று அவர்கள் மோசமாகக் கற்பனை செய்தார்கள். ஷைத்தான் இதனை அலங்காரமாக காட்டி விட்டான். (அல் குர்ஆன் - பத்ஹ் - 12). மோசமான விடயங்களை அலங்காரமாகக் காட்டி தப்பபிப்பிராயங்களை தோற்றுவிப்பது ஷைத்தானின் இயல்பாகும். ஆதம் (அலை) அவர்களது உள்ளத்திலும் ஷைத்தான் இப்படித்தான் சந்தேகங்களை ஏற்படுத்தினான். ஸபிய்யா பின்த் ஹுயை (ரழி) அவர்கள் நபி (ஸல்) அவர்களிடம் வந்தபோது இரு அன்சாரித் தோழர்கள் அவர்களை கடந்து சென்றார்கள். அப்போது நபியவர்கள் அவ்விருவரையும் அழைத்து 'இவர் (எனது மனைவி) ஸபிய்யா' என்று குறிப்பிட்டார்கள். அதற்கு அவர்கள் இருவரும் அல்லாஹ் தூய்மையானவன்' என்று கூறிய போது நபியவர்கள் 'நிச்சயமாக ஷைத்தான் மனிதனின் இரத்தம் ஓடக்கூடிய அனைத்து இடங்களிலும் ஓடுகிறான்' என்றார்கள். (ஆதாரம்: - புஹாரி)

சந்தேகமும் தப்பெண்ணமும் தோன்றுவதற்கான வாய்ப்புள்ள இடத்தில் நபி (ஸல்) அவர்கள் எவ்வளவு தூரம் அவதானமாக நடந்துள்ளார்கள் என்பதை இது தெளிவுபடுத்துகிறது.

ஒரு விடயத்தை அல்லாஹ்வும் தூதரும் தெளிவாக சுட்டிக்காட்டியிருக்கும் நிலையில் மனோ இச்சைப்படி செயல்படுவதும் ஷைத்தானின் தூண்டுதலுடன் தொடர்பான ஒரு விடயம்தான். 'மனோ இச்சையைப் பின்பற்றும்படி ஷைத்தான்கள் அழைப்பு விடுத்தவர் போன்று...' (அல் குர்ஆன் - அன்ஆம்- 71) என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

மனோ இச்சைப்படி நடப்பவன், அடுத்தவர் மீது தப்பெண்ணம் கொள்வான். 'அவர்கள் ஊகங்களோடு கூடிய தப்பெண்ணங்களையும் மனோ இச்சைகளையும் மாத்திரமே பின்பற்றுவார்கள். (அல் குர்ஆன் - நஜ்ம்: 23)

அதனால்தான் இமாம் இப்னு தைமிய்யா (ரஹ்) அவர்கள் 'மிக மோசமான வழிகேடு ஊகங்களோடு கூடிய தப்பெண்ணங்களும் மனோ இச்சையை பின்பற்றுவதுமாகும்' என்று குறிப்பிட்டிருக்கிறார்கள். (ஆதாரம் - மஜ்மூஉல் பதாவா 3/384)

'மனோ இச்சையை நீங்கள் பின்பற்றினால் போக வேண்டிய பாதையிலிருந்து வழிதவறி விடுவீர்கள். (அல் குர்ஆன் - ஸாத்:26)

அறிவீனமும் தப்பெண்ணங்களை உருவாக்குகிறது. பாரதூரத்தை உணராதவர்கள் பலர் இவ்வாறு செயல்படுவதனை நாம் காண முடிகின்றது. 'நீர் பூமியிலுள்ள அதிகமானவர்களை பின்பற்றினால் அவர்கள் சரியான பாதையிலிருந்து உங்களை திசை திருப்பி விடுவார்கள். (அல் குர்ஆன் - அன்ஆம்:116)

இது போன்ற நிலைகளிலிருந்து பாதுகாப்பு பெறுவதற்கு மார்க்க அறிஞர்களுடன் தொடர்பினை பேணிக்கொள்வதும் தனது நிலையை கேள்வியாக கேட்டு உணர்ந்து தன்னை மாற்றிக்கொள்வதும் அவசியமாகும். 'உங்களுக்கு தெரியாவிட்டால் தெரிந்தவர்களிடம் கேளுங்கள். '

(அல் குர்ஆன் - நஹ்ல்:43),

அறியாமை என்ற நோய்க்கான மருந்து கேள்வி கேட்பதில்தான் இருக்கிறது' என்று நபி(ஸல்) அவர்கள் குறிப்பிட்டார்கள். (ஆதாரம்: அபூ தாவூத்). ஷைத்தானின் வழிமுறைகளையும் மனோ இச்சைக்கு கட்டுப்படுவதன் பாரதூரத்தையும் ஒருவன் அறிந்து, புரிந்து, உணர்ந்து கொள்வதன் மூலம் அறியாமை மறைந்து தன்னை மாற்றிக்கொள்ளும் நிலை கிடைக்கப்பெறுகிறது. அதுவே இன்றியமையாதாகும்.

அஷ்ஷெய்க் யூ.கே. றமீஸ் (எம்.ஏ) 
சமூகவியல்

Post a Comment

0 Comments