Trending

6/recent/ticker-posts

Header Ads Widget

இயக்குநரும் நடிகருமான இ. ராமதாஸ் காலமானார்!

 


திரைப்பட இயக்குநரும் சினிமா எழுத்தாளருமான இ. ராமதாஸ் காலமானார். பல திரைப்படங்களின் திரைக்கதையில் பங்களிப்பு செலுத்தியுள்ள ராமதாஸ், ஒரு சிறந்த நடிகரும்கூட.

சென்னையில் வசித்து வந்த ராமதாஸ், நேற்று காலையில் உடல்நலம் பாதிக்கப்பட்டு சென்னை எம்.ஜி.எம். மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். ஆனால், இரவு பத்து மணி அளவில் அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்ததாக அவரது மகன் கலைச்செல்வன் தெரிவித்திருக்கிறார்.

விழுப்புரம் மாவட்டத்தில் எத்திராஜுலு - பூங்காவனம் தம்பதியின் மகனாகப் பிறந்த ராமதாஸ், சிறு வயதிலிருந்தே திரைப்படங்களில் ஆர்வம் கொண்டிருந்ததால், கல்லூரிப் படிப்பை முடித்த பிறகு, சென்னைக்குக் குடிபெயர்ந்தார்.

பி.எஸ். நிவாஸ் இயக்கத்தில் சுமன், சுமலதா நடித்து 1981இல் வெளிவந்த 'எனக்காகக் காத்திரு' படத்திற்கு வசனம் எழுதியதன் மூலம் தமிழ்த் திரையுலகிற்கு ராமதாஸ் அறிமுகமானார். இதற்குப் பிறகு இயக்குநர் மணிவண்ணனிடமும் மதர்லாண்ட் பிக்சர்ஸ் கோவைத் தம்பியிடமும் சில காலம் பணியாற்றினார்.

இதற்குப் பிறகு கோவைத் தம்பி தயாரிப்பில், மோகனும் சீதாவும் நடித்த 'ஆயிரம் பூக்கள் மலரட்டும்' என்ற படத்தை இயக்கினார். 1986இல் வெளிவந்த இந்தப் படத்தில் 'பூமேடையோ பொன்வீணையோ' போன்ற பல நல்ல பாடல்கள் இருந்த நிலையில், இந்தப் படம் பெரும் வெற்றிப்படமாக அமைந்தது. இதற்குப் பிறகு, ராமராஜனையும் கௌதமியையும் வைத்து 'ராஜா ராஜாதான்' என்ற படத்தை இயக்கினார்.

இதற்குப் பிறகு, 'ராவணன்', 'வாழ்க ஜனநாயகம்' ஆகிய படங்களை இயக்கினார். 1999இல் 14 இயக்குநர்கள் சேர்ந்து இயக்கிய 'சுயம்வரம்' படத்திலும் ராமதாஸ் இயக்குநராக இருந்தார். இந்தப் படத்தில் பாண்டியராஜன், கஸ்தூரி இடம்பெற்ற காட்சிகளை இவர் இயக்கியிருந்தார்.

இதற்குப் பிறகு, 'மக்கள் ஆட்சி', 'சங்கம்', 'கண்ட நாள் முதல்' உள்ளிட்ட 15க்கும் மேலான படங்களின் திரைக்கதையில் பங்களிப்பு செய்திருக்கிறார்.

மேலும், 'வசூல் ராஜா எம்.பி.பி.எஸ்.' படத்தில் ஒரு வார்டு பாயாக நடித்தார். இதையடுத்து 'யுத்தம் செய்' படத்தில் காவலர் வேடத்தில் அவருடைய நடிப்பு பெரும் கவனத்தைப் பெற்றது. இதைத் தொடர்ந்து அவருக்கு நடிக்கும் வாய்ப்புகள் வந்தன. 'காக்கிச்சட்டை', 'விசாரணை', 'தர்மதுரை', 'விக்ரம் வேதா', 'அறம்', 'கோலி சோடா', 'மாரி - 2' உள்ளிட்ட சுமார் 25 படங்களில் அவர் நடித்திருக்கிறார்.

அவரது இறுதிச் சடங்கு சென்னை கே.கே. நகரில் உள்ள அவரது இல்லத்தில் இன்று மாலை ஐந்து மணிக்குள் நடைபெறுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.

நடுநிலை மற்றும் நம்பகத்தன்மையான செய்திகளுக்கு... 
STAR 'செய்திகள்'

Post a Comment

0 Comments