நடைபெற இருக்கின்ற உள்ளுராட்சி மன்ற தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சி ஏனைய அரசியல் கட்சிகளை இணைத்துக்கொண்டு யானை சின்னத்தில் போட்டியிட நடவடிக்கை எடுத்துவருகிறோம். அதேநேரம் புதிய செயலாளர் நியமனம் கட்சியின் வெற்றிக்கு பாரிய சக்தியாக அமையும் என ஐக்கிய தேசிய கட்சியின் தவிசாளர் வஜிர அபேவர்தன தெரிவித்தார்.
ஐக்கிய தேசிய கட்சி தலைமையகமான சிறிகொத்தவில் நடைபெற்ற விசேட செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.
அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்;
ஐக்கிய தேசிய கட்சியின் முதலாவது பெண் பொதுச் செயலாளராக சட்டத்தரணி தலதா அத்துகோரல கடமைகளை பொறுப்பேற்றிருக்கிறார். அத்துடன் அவர் ஐக்கிய தேசிய கட்சியின் 27ஆவது பொதுச் செயலாளர் ஆவார்.
தலதா அத்துகோரல முன்னாள் அமைச்சர் என்பதுடன் ஒரு சட்டத்தரணி ஆவார். அத்துடன் முழுநேர அரசியல்வாதியாக சிறந்த வேலைத்திட்டங்களை மேற்கொள்ள முடியுமான அனுபவமுள்ள உறுப்பினர். அவரது தந்தை ஜே.ஆர்.ஜயவர்த்தனவின் காலத்தில் ஐக்கிய தேசிய கட்சியின் செயற்குழுவில் அங்கம் வகித்தவர். அதன் பின்னர் காமினி அத்துகோரல ஐக்கிய தேசிய கட்சியின் 18ஆவது பொதுச் செயலாளர் என்பதும் செயற்குழு உறுப்பினராகவும் இருந்தார்.
மேலும் இந்த வருடம் இடம்பெற இருக்கும் உள்ளூராட்சி மன்ற தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சி மற்றும் ஐக்கிய தேசிய முன்னணி ஏனைய அரசியல் கட்சிகளை ஒன்றிணைத்துக்கொண்டு யானை சின்னத்தில் தேர்தலில் போட்டியிடுவதற்கான நடவடிக்கை எடுத்து வருகிறோம். அதேபோன்று 2025ஆம் ஆண்டில் எமக்கு பொருத்தமான பொருத்தம் இல்லாத அனைவரையும் இணைத்துக்கொண்டு இலங்கையை கட்டியெழுப்புவதே முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் திட்டமாகும்.
மேலும் பாராளுமன்றத்தில் பிரபல எதிர்க்கட்சி ஒன்றை அமைப்பதும் எமது நோக்கமாகும். அதற்கு அனைவருடனும் கலந்துரையாட நாங்கள் தயாராக இருக்கிறோம்.
எனவே அனுபவமுள்ள தலைவி என்றவகையில் தலதா அத்துகோரலவை கட்சியின் பொதுச் செயலாளராக நியமித்தமை தொடர்பில் ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவுக்கு நாங்கள் நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம். அதேபோன்று புதிய பொதுச் செயலாளர் இந்த கட்சிக்காக பாரிய வேலைத்திட்டத்தை எதிர்காலத்தில் முன்னெடுப்பார் என ரணில் விக்ரமசிங்கவின் நம்பிக்கையாகும். அதனால் புதிய பொதுச் செயலாளரின் நியமனம் கட்சிக்கும் நாட்டுக்கும் நன்மையாக அமையும் என எதிர்பார்க்கிறோம் என்றார்.
0 Comments