
இஸ்லாத்தின் முக்கிய கடமைகளில் ஒன்றான ஹஜ், ஹிஜ்ரி 09 இல் கடமையாக்கப்பட்டது. ஹஜ்ஜூ என்னும் புனித யாத்திரை மேற்கொள்ளும் ஒருவர் தனது இறைநம்பிக்கையை முழுமையாக்குவதுடன் எல்லாம் வல்ல இறைவனுக்கு உண்மையாகவே அடிபணிந்து இருப்பதை வெளிப்படுத்துகிறார். ஹஜ் என்பது ஆன்மீக வளர்ச்சியின் உச்ச கட்டத்திற்கு ஓர் அறிகுறியாகவும் அடையாளமாகவும் விளங்குகிறது.
மனிதன் இம்மையிலும் மறுமையிலும் முழுமையான சுபீட்சத்தை அடைவதற்கு அவசியமான விதிகளையும் வழி முறைகளையும் வகுத்துத் தந்துள்ள இஸ்லாம், துறவற வாழ்வுக்கு பதிலாக ஹஜ்ஜையும் அறப்போராட்டத்தையும் விதியாக்கியுள்ளது. உலகப் பற்றை அறப் போராட்டத்தினாலும் உலகக் கேடுகளை ஹஜ்ஜினாலும் நீக்குவதற்கு அது வழிவகுத்துள்ளது.
மக்காவின் கஃபாவுக்கு சென்று ஹஜ் செய்யும் வழக்கம் முஹம்மது (ஸல்) அவர்களால் அறிமுகப்படுத்தப்பட்ட ஒன்றல்ல. இது நபி (ஸல்) அவர்களுக்கு முன்பிருந்தே வழக்கில் இருந்த பழக்கமாகும்.
ஹஜ்ஜானது மனிதன் அணுவளவும் குறைபாடுகள் இன்றி இறைக்கட்டளைகளுக்குக் கீழ்ப்படிந்து தன்னை பக்குப்படுத்திக்கொள்ள மிகவும் நல்லதொரு பயிற்சியை அளிக்கக்கூடியதாக உள்ளது.
இறைவன் ஒருவனே… என்பதற்கு மத்திய இடமாக நிறுவப்பட்டுள்ள புனித கஃபாவில் உலகெங்கிலும் இருந்தும் முஸ்லிம்கள் வருடாவருடம் ஒன்றுகூடுகிறார்கள். அங்கு ஹஜ்ஜாஜிகள் ஒற்றுமையை மாத்திரமல்லாமல் ஏற்றத் தாழ்வற்ற சமத்துவத்தையும் சகோதரத்துவத்தையும் வெளிப்படுத்தி நிற்கின்றனர்.
ஷவ்வால்’, ‘துல்கஃதா’ ஆகிய இரு மாதங்களும் ‘துல்ஹஜ்’ மாதத்தில் முதல் 09 நாட்களும் மிகப் புனித நாட்களாக யாத்திரிகர்களால் நோக்கப்படுகிறது.
இது குறித்து அல் குர்ஆன், ஹஜ் (அதற்கெனக் குறிப்பிட்ட ஷவ்வால், துல்கஃதா, துல்ஹஜ்ஜூ ஆகிய) மாதங்கள்தான். ஆகவே அவற்றில் எவரேனும் (இஹ்ராம் அணிந்து) ஹஜ்ஜை (தன்மீது) கடமையாக்கிக் கொண்டால் துல்ஹஜ்ஜூ (மாதம் பத்தாம் நாள்) வரையில் உடலுறவு கொள்ளல், தகாத வார்த்தைகளைப் பேசுதல், சண்டைச் சச்சரவுகள் செய்தல் ஆகியவற்றைத் தடுக்க வேண்டும். நீங்கள் என்ன காரியத்தைச் செய்தாலும் அவற்றை அல்லாஹ் நன்கறிந்தவனாக இருக்கிறான். இன்னும் ஹஜ் யாத்திரைக்குத் தேவையான உணவுப்பண்டங்கள் முன்கூட்டியே சித்தப்படுத்திக் கொள்ளுங்கள்’ என்று குறிப்பிட்டுள்ளது.
இறைவனுடைய கட்டளைக்கு முழுமையாக அடிபணிந்து நடக்க வேண்டும் என்பதே ஹஜ் நமக்கு கற்றுத்தரும் பாடமாகும்.
இறைவன் நமக்கு இட்ட கட்டளையே ஹஜ். அதற்கு நாம் அடிபணிய வேண்டும் என்ற ஒரே நோக்குடையவராக செயற்பட வேண்டும். ஹஜ்ஜாஜி கஃபாவை வலம் வருவதில் இருந்தும் ‘ஹஜ்ஜருல் அஸ்வத்’ என்ற கல்லை முத்தமிடுவதில் இருந்தும் ஸபா, மர்வா எனும் இரு குன்றுகளிடையே தொங்கோட்டம் ஓடுவதில் இருந்தும் ‘ஜம்ரா’ எனும் பகுதியில் கற்களை எறிவதில் இருந்தும் தனக்கிடப்பட்டுள்ள கட்டளைகளைப் பற்றி துருவித் துருவி ஆராயாமல் இறைவனின் கட்டளைக்கு அப்படியே அடிபணிந்து செயல்படுகிறான்.
இப்புனித யாத்திரையை இவ்வுலகத் தொடர்புகள் அனைத்தையும் துண்டித்து விட்டு மறுமைக்காக ஆயத்தமாகும் இறைவனின் திருச்சந்திப்பை பெறுவதற்கும் ஓர் அடையாளமாகவும் கருத வேண்டும்.
ஹஜ் கடமையை நிறைவேற்றுவதன் மூலம் நமக்கு பலவிதமான நன்மைகள் கிடைக்கப்பெறுகின்றன. ஆடையை அணிந்ததும் நம் உள்ளத்தில் இயல்பாகவே ஓர் எளிய வாழ்க்கையின் தன்மையும் உணர்வும் ஏற்பட்டு விடுகிறது. அத்தோடு எல்லா முஸ்லிம்களும் ஒரே விதமான எளிய ஆடையை அணிந்திருப்பதைப் பார்க்கும் போது, முஸ்லிம்கள் எக்குலத்தவராக இருப்பினும், எந்த நிறத்துடையவராக, எந்த நாட்டைச் சேர்ந்தவராக இருப்பினும் எல்லோரும் சகோதரர்களே என்ற நல்லுணர்வைப் பெற்றுக்கொள்ள முடிகிறது.
அத்தோடு ஹஜ்ஜில் எல்லா முஸ்லிம்களும் ஒருவர் பின் ஒருவராய் கஃபாவை வலம் வரும் செயலில் ஈடுபடும் போது, உலகின் பல பாகங்களில் இருந்தும் கூடியுள்ள இறைவிசுவாசிகள் அனைவரும் ஒரேவிதமான செயலில் ஈடுபடுவதை கண்கூடாகக்காண முடியும். இது இறைவிசுவாசிகள் மத்தியில் நிற, மொழி, பிரதேச வேறுபாடுகளுக்கு அப்பால் ஐக்கியம் மேம்படவும் சகோதரத்துவமும் நல்லெண்ணமும் வளர்ச்சியடையவும் வழிவகுக்கிறது.
ஆக ஆன்மீக, லௌஹீக மேம்பாட்டுக்கும் சகோதரத்துவமும் சமத்துவமும் தழைத்தோங்கவும் ஹஜ் பாரிய பங்களிப்பு நல்குகிறது. இதனை உறுதிபடக்கூறலாம்.
மௌலவி
எம்.யூ.எம். வாலிஹ்…
(அல் அஸ்ஹரி), வெலிகம
0 Comments