
சவூதி அரேபியாவில் இந்த ஆண்டு மரண தண்டனை நிறைவேற்றப்படுபவர்களின் எண்ணிக்கை முன்னெப்போதும் இல்லாத வகையில் அதிகரித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்த ஆண்டில் மட்டும் இதுவரை குறைந்தது 347 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.
இது 2024ஆம் ஆண்டின் மொத்த எண்ணிக்கையான 345ஐ விட அதிகமாகும்.
இதன்படி தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக சவூதி அரேபியா தனது முந்தைய மரண தண்டனை சாதனைகளை முறியடித்துள்ளது.
மரண தண்டனை நிறைவேற்றப்பட்டவர்களில் மூன்றில் இரண்டு பங்கினர் (சுமார் 66%) போதைப்பொருள் தொடர்பான குற்றங்களுக்காகவே தண்டிக்கப்பட்டுள்ளனர்.
இதில் பாதிக்கும் மேற்பட்டோர் வெளிநாட்டினர்.
குறிப்பாக எகிப்து, பாகிஸ்தான் மற்றும் ஜோர்தான் நாடுகளைச் சேர்ந்தவர்கள் இதில் அடங்குவர்.
போராட்டத்தில் ஈடுபட்டதாகக் குற்றம் சாட்டப்பட்டபோது சிறுவர்களாக இருந்த இருவர் (அப்துல்லா அல்-தெராசி மற்றும் ஜலால் அல்-லபாத்) இந்த ஆண்டு தூக்கிலிடப்பட்டனர்.
மேலும் துருக்கி அல்-ஜாசர் என்ற பத்திரிகையாளர் பயங்கரவாதக் குற்றச்சாட்டுகளின் கீழ் தூக்கிலிடப்பட்டது சர்வதேச அளவில் கண்டிக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில் விசாரணையின் போது கைதிகள் சித்திரவதை செய்யப்பட்டு, கட்டாய வாக்குமூலங்கள் பெறப்படுவதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
மேலும் போதைப்பொருள் குற்றங்களுக்கு மரண தண்டனை வழங்குவது சர்வதேச விதிமுறைகளுக்கு எதிரானது என ஐக்கிய நாடுகள் சபை கண்டனம் வெளியிட்டுள்ளது.
சவூதி அரேபியாவின் இளவரசர் முகமது பின் சல்மான் நாட்டை நவீனமயமாக்கி வரும் வேளையிலும், மனித உரிமைகள் மற்றும் கருத்து சுதந்திரம் மீதான ஒடுக்குமுறை மிகக் கடுமையாக இருப்பதாக மனித உரிமை ஆர்வலர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
அத்துடன் மரண தண்டனை விதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினருக்குத் தகவல் தெரிவிக்கப்படுவதில்லை என்றும், உடல்கள் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படுவதில்லை என்றும் சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.



0 Comments