நாட்டின் இருவேறு பகுதிகளில் பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட சோதனைகளில், ஐஸ் போதைப்பொருள் மற்றும் சட்டவிரோத மதுபானம் தயாரிக்க பயன்படுத்தப்படும் கோடாவுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அதன்படி, கொழும்பு – கிராண்ட்பாஸ் பகுதியில், ஐஸ் போதைப்பொருளுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
நேற்று மதியம் இந்த சம்பவம் பதிவாகியுள்ளது. கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினருக்கு கிடைத்த தகவலுக்கமைய முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பின்போதே, அவர் கைது செய்யப்பட்டார். இதன்போது, சந்தேகநபரிடமிருந்து 510 கிராம் 440 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது. சந்தேகநபர் அங்கொடை பகுதியைச் சேர்ந்த 31 வயதுடையவர் என தெரியவந்துள்ளது.
இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவு மேற்கொண்டு வருகிறது.
இதேவேளை. மொரகஹேன பகுதியில் சட்டவிரோத மதுபானம் தயாரிக்கப் பயன்படுத்தப்படும் கோடாவுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
நேற்று காலை இந்த சம்பவம் பதிவாகியுள்ளது. இதன்போது, சந்தேகநபரிடமிருந்து 1110 லீற்றர் கோடா கைப்பற்றப்பட்டுள்ளது.சந்தேகநபர் கோனபொல பகுதியைச் சேர்ந்த 48 வயதுடையவர் என தெரியவந்துள்ளது. இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மொரகஹேன பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.




0 Comments