
மேல், சபரகமுவ மற்றும் தெற்கு மாகாணங்களில் பலத்த மின்னல் எச்சரிக்கை: பொதுமக்கள் அவதானமாக இருக்குமாறு வேண்டுகோள்
மேல், சபரகமுவ மற்றும் தெற்கு மாகாணங்களின் சில பகுதிகளில் இடியுடன் கூடிய மழையுடன் பலத்த மின்னல் தாக்கங்கள் ஏற்படுவதற்கான அதிக சாத்தியக்கூறுகள் காணப்படுவதாக வானிலை அவதானிப்பு நிலையம் தெரிவித்துள்ளது.
இடியுடன் கூடிய மழை பெய்யும் போது அப்பகுதிகளில் தற்காலிகமாக பலத்த காற்று வீசக்கூடும். மின்னல் தாக்கங்களினால் ஏற்படும் விபத்துக்களைக் குறைப்பதற்குத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
மின்னல் மற்றும் இடி முழக்கங்கள் நிலவும் போது பின்வரும் பாதுகாப்பு நடவடிக்கைகளைப் பின்பற்றுமாறு வானிலை அவதானிப்பு நிலையம் பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது:
திறந்தவெளிகளிலோ அல்லது மரங்களின் கீழோ நிற்பதைத் தவிர்த்து, பாதுகாப்பான கட்டிடம் அல்லது மூடிய வாகனங்களுக்குள் தங்கியிருக்கவும்.
வயல்வெளிகள், தேயிலைத் தோட்டங்கள், விளையாட்டு மைதானங்கள் மற்றும் நீர்நிலைகள் போன்ற திறந்தவெளிகளில் தங்கியிருப்பதைத் தவிர்க்கவும்.
கம்பி இணைப்புடைய (Wired) தொலைபேசிகள் மற்றும் மின்சாரத்துடன் இணைக்கப்பட்ட மின் சாதனங்களைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கவும்.
துவிச்சக்கர வண்டிகள், டிராக்டர்கள் மற்றும் படகுகள் போன்ற திறந்த வாகனங்களைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கவும்.
பலத்த காற்றினால் மரங்கள் மற்றும் மின் கம்பிகள் முறிந்து விழக்கூடும் என்பதால் அது குறித்து அவதானமாக இருக்கவும்.
அவசர காலங்களில் பிரதேச அனர்த்த முகாமைத்துவ அதிகாரிகளின் உதவியை நாடவும்.



0 Comments