
டெங்கு நோய்த்தாக்கமானது தற்போதைய நிலையில் எதிர்பாராத விதமாக அதிகரித்து வருவதாக இலங்கை பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
அரச நிறுவனங்கள் மற்றும் மத வழிபாட்டுத் தலங்களில் இந்த நிலைமை மிகவும் தீவிரமாக அவதானிக்கப்பட்டுள்ளதாக அச்சங்கத்தின் பதில் தலைவர் உபுல் ரோஹண குறிப்பிட்டுள்ளார்.
இவ்வாறானதொரு பின்னணியில், டெங்கு நோயைத் தடுப்பதற்கும் கட்டுப்படுத்துவதற்கும் புதிய சுற்றறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளதுடன், அதற்கமைய நேற்று (24) முதல் நாளை மறுதினம் (26) வரை 3 நாட்களுக்கு விசேட டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவின் தரவுகளின்படி, டெங்கு நோய் காரணமாக இதுவரையில் 29 மரணங்கள் பதிவாகியுள்ளன.
அத்துடன், இந்த ஆண்டில் இதுவரையான காலப்பகுதியில் பதிவாகியுள்ள டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 48,287 ஆக உயர்வடைந்துள்ளது.
அதன்படி, பதிவாகியுள்ள மொத்த நோயாளர்களில் 52 சதவீதமானோர் மேல் மாகாணத்தைச் சேர்ந்தவர்களாவர். அந்த எண்ணிக்கை 25,167 ஆகும்.
அத்துடன், டெங்கு அதிஅவதான வலயங்களாக அடையாளம் காணப்பட்டுள்ள சுகாதார வைத்திய அதிகாரி (MOH) பிரிவுகளின் எண்ணிக்கை 112 ஆக அதிகரித்துள்ளது.
நாளாந்தம் அதிகளவிலான டெங்கு நோயாளர்கள் பதிவாகி வருவதன் காரணமாக, மருத்துவமனைகளின் கொள்ளளவும் மீறப்பட்டுள்ளதாக சுகாதாரத் துறையினர் தெரிவித்துள்ளனர்.
களுபோவில போதனா மருத்துவமனை மற்றும் ஐ.டி.எச் தொற்றுநோய் தடுப்பு மருத்துவமனை ஆகியன டெங்கு நோயாளர்களினால் தங்களின் அதிகபட்ச கொள்ளளவை எட்டியுள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவு குறிப்பிட்டுள்ளது.
இதேவேளை, கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துரைத்த தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவின் பதில் பணிப்பாளர் மருத்துவர் கபில கண்ணங்கர, டெங்கு நோயுடன் சேர்த்து சிக்குன்குனியா நோயும் தற்போது தலைதூக்கியுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.



0 Comments