![](https://ptm-cms-images.sgp1.cdn.digitaloceanspaces.com/uploads/news-image/2023/01/12/800x400/168974.webp)
நடிகர் விஜய்யுடன் இரண்டாவது முறையாக இணைந்துள்ள ‘தளபதி 67’ படத்தின் அப்டேட் குறித்த கேள்விக்கு, இயக்குநர் லோகேஷ் கனகராஜ் பதிலளித்துள்ளார்.
வம்சி பைடிபள்ளி இயக்கத்தில், தில் ராஜூ தயாரிப்பில், விஜய் நடித்துள்ள ‘வாரிசு’ திரைப்படம் நேற்று உலகம் முழுவதும் வெளியானது. கலவையான விமர்சனங்களை பெற்று வரும் இந்தப் படத்தில் ராஷ்மிகா மந்தனா, ஜெயசுதா, சங்கீதா, சரத்குமார், பிரகாஷ் ராஜ், யோகி பாபு, எஸ்.ஜே.சூர்யா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். தமன் இசையமைத்துள்ளார்.
இந்தப் படத்தைத் தொடர்ந்து நடிகர் விஜய் மீண்டும் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டது. தற்காலிகமாக ‘தளபதி 67’ என்று பெயரிடப்பட்டுள்ள இந்தப் படத்தின் பூஜையும் சமீபத்தில் ரகசியமாக நடைபெற்றது. மேலும் சென்னையில் படப்பிடிப்பும் துவங்கியுள்ளது. லோகேஷ் கனகராஜ் கடைசியாக இயக்கிய ‘விக்ரம்’ படம் 400 கோடி ரூபாய்க்கும் மேல் வசூலித்த நிலையில், ‘தளபதி 67’ படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்து காணப்படுகிறது.
இந்தநிலையில், தேசிய இளைஞர்கள் தினத்தை முன்னிட்டு கோவை வருமானவரித்துறை சார்பில், துடியலூர் பகுதியில் இளம் தொழில் முனைவோர்களுக்கான பாராட்டு நிகழ்ச்சியில் கலந்துகொண்ட லோகேஷ் கனகராஜிடம், செய்தியாளர்கள் பல கேள்விகளை எழுப்பினர். அப்போது, ‘தளபதி 67’ குறித்துக் கேட்டதற்கு, “ ‘வாரிசு’ படம் வெளியாவதை ஒட்டி ‘தளபதி 67’ பட அப்டேட் ஏதும் கொடுக்காமல் இருந்தோம். தற்போது படம் வெளியாகிவிட்டது, இன்னும் 10 நாட்களில் ‘தளபதி 67’ அப்டேட் எதிர்பார்க்கலாம். அதன் தொடர்ச்சியாக அப்டேட்கள் வெளியாகும். தற்போது படபிடிப்பு நடந்து வருகிறது. தீபாவளி வெளியீடாக வருமா என்பதெல்லாம் இன்னும் முடிவு செய்யவில்லை” என்று தெரிவித்தார்.
மேலும், தமிழகம் என்று சொல்ல விரும்புகிறீர்களா? இல்லை தமிழ்நாடு என்று சொல்ல விரும்புகிறீர்களா என்பது குறித்த கேள்விக்கு, “தமிழ்நாடு என்று சொல்லவே விரும்புகிறேன்” என்றுக் கூறியுள்ளார்.
THANKS: Puthiyathalaimurai
0 Comments