Trending

6/recent/ticker-posts

Header Ads Widget

பணிப்பெண்ணாகச் சென்ற பெண் உயிரிழப்பு : உடலை கொண்டு வர உதவுமாறு உறவினர்கள் கோரிக்கை!


சவூதி அரேபியாவுக்கு கடந்த வருடம் வீட்டு பணிப்பெண்ணாக சென்ற ராஜேந்திரன் தினகேஸ்வரி எனும் பெண் உயிரிழந்துள்ளதாக அவரது உறவினர்கள் தெரிவித்துள்ளனர். 

ஹட்டன் டிக்கோயா, பகுதியை வசிப்பிடமாக கொண்ட 27 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தாயான இராஜேந்திரன் தினகேஸ்வரி என்பவரே உயிரிழந்துள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


தனக்கும் தனது கணவருக்கும் நிரந்தர வருமானம் மற்றும் இருப்பிட வசதிகள் இல்லாத நிலையில் இரண்டு பிள்ளைகளின் தாயான தினகேஸ்வரி குடும்ப வருமையை நிவர்த்திக்கும் நோக்குடன் கடந்த வருடம் சவூதி அரேபியாவுக்கு வீட்டு பணிப்பெண்ணாக சென்றுள்ளார்.

இவ்வருடம் 2023.04.05ஆம் திகதி வரை அவர் தங்களுடன் தொலைப்பேசி ஊடாக தொடர்புகளை பேணியதாகவும் அதன் பிறகு அவரின் தொலைப்பேசியுடன் தொடர்பை ஏற்படுத்த முடியாது போயுள்ளதாகவும் அவரது அத்தை தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் பயண முகவருடன் தொடர்புகளை மேற்கொண்ட தமக்கு மே மாதம் 8ஆம் திகதியே தினகேஸ்வரி இறந்து விட்டதாக தகவல் தெரிவிக்கப்பட்;;டதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.

ஐந்தாம் மாதம் முதல் தாம் இவரின் இறப்பு தொடர்பாக தெளிவினை பெற்றுக் கொள்வதற்காக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம், வெளிநாட்டு அமைச்சு, பயண முகவர், சவூதி தூதரகம் என அனைத்து இடங்களுக்கு சென்று வந்த போதும், இதுவரைக்கும் தமக்கு தமது மருமகளின் மரணம் தொடர்பாக எவ்வித உண்மைகளையும் தெரிந்துக் கொள்ள முடியாது உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

சுற்றுலா விசா மூலமே இவர் சவூதி அரேபியாவுக்கு அனுப்பப்பட்டதும் இவரின் கடவுச்சீட்டில் இவரின் அப்பாவின் பெயரான ராஜேந்திரன் என்பதற்கு பதிலாக தாத்தாவின் பெயரான சாமிநாதன் சேர்க்கப்பட்டு தினகேஸ்வரி சாமிநாதன் என குறிப்பிடப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இவ்விடயம் தினகேஸ்வரி வெளிநாட்டிற்கு சென்ற பின்னரே தமக்கு தெரியவந்ததாகவும் அவரின் அத்தை சாமிநாதன் லெச்சுமி தெரிவிக்கின்றார்.

தனது மருமகளின் உடலை இலங்கைக்கு கொண்டு வருவதற்கு 10 இலட்சம் ரூபாய் கேட்கப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

உயிரிழந்த பெண்ணின் இரண்டு பிள்ளைகளையும் வளர்க்க தமக்கு எவ்வித உதவியும் இல்லை எனத் தெரிவித்துள்ள குறித்த பெண்ணின் அத்தை, தனது மருமகளின் மரணம் தொடர்பான விசாரணைகள் நடத்தப்பட வேண்டும் என்றும் அவரது சடலத்தை நாட்டுக்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

Post a Comment

0 Comments