Trending

6/recent/ticker-posts

Header Ads Widget

சேவையிலிருந்து அகற்றப்பட்ட 200 பஸ்கள் புனரமைத்து போக்குவரத்துக்கு இணைப்பு...!


இலங்கை போக்குவரத்துச் சபையின் பஸ் வண்டிகள் கட்டமைப்பை வலுப்படுத்தும் வகையில், சேவையிலிருந்து நீக்கப்பட்ட 200 பஸ்கள் புனரமைக்கப்பட்டு சேவைக்கு கொண்டு வரப்பட்டன.

போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் வெகுஜன ஊடகத்துறை அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தனவின் ஆலோசனைக்கமைய, புனரமைக்கப்பட்ட இப்பஸ் வண்டிகள் சேவைக்கு விடும் நிகழ்வு, பிரதமர் தினேஷ் குணவர்தன தலைமையில் நடைபெற்றது.

கடந்த ஆண்டு ஜனவரி மாதத்துக்குள் இ.போ.ச டிப்போக்களில் 852 பஸ்கள் சேவையிலிருந்து நிறுத்தப்பட்டன. மேலும் நாடளாவிய ரீதியில் 11 பிராந்திய வேலைத் தளங்கள் மற்றும் 107 இ.போ.ச டிப்போக்களின் பொறியியலாளர்கள் மற்றும் தொழில்நுட்ப வல்லுநர்கள் இந்தப் பஸ்களை மறுசீரமைக்கத் தொடங்கினர்.

2023ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட இந்த பஸ் புனரமைப்பு வேலைத்திட்டத்தின் முதற்கட்டத்தின் கீழ் சேவையிலிருந்து நீக்கப்பட்ட 193 பஸ்கள் புனரமைக்கப்பட்டுள்ளதுடன் 193 மில்லியன் ரூபா செலவிடப்பட்டுள்ளது. அதன் இரண்டாம் கட்டத்தின் கீழ் 201 பஸ்கள் சீரமைக்கப்பட்டுள்ளன. அதற்காக செலவிடப்பட்ட தொகை 270 மில்லியன் ரூபா. தற்போதைய விலையில் 200 புதிய பஸ்களை கொள்முதல் செய்தால், சுமார் 4,200 மில்லியன் ரூபா செலவு செய்ய வேண்டிய நிலை உருவாகும். புனரமைக்கப்பட்ட பஸ்களை நாளாந்தம் இயக்குவதன் மூலம் இலங்கை போக்குவரத்து சபைக்கு நாளாந்தம் சுமார் 10 மில்லியன் ரூபா வருமானம் கிடைக்கும்.

நிகர இலாபம் 04 மில்லியன் ரூபாய். அதன்படி, இந்த இருநூறு புனரமைக்கப்பட்ட பஸ்களை இயக்குவதன் மூலம் அதிகபட்சமாக 1,200 மில்லியன் ரூபா நிகர இலாபம் ஈட்ட முடியும். ஆண்டுக்கு குறைந்தபட்ச நிகர இலாபம் 900 மில்லியன் பெறலாமென தெரிவிக்கப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments