
தமது பாராளுமன்ற உறுப்பினர் ஓய்வூதியத்தை நீக்குமாறு பாராளுமன்றத்திற்கு கடிதமொன்றை கையளித்துள்ளதாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க சபையில் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் இன்று (21) வரவு செலவுத் திட்டத்தின் குழு நிலை விவாதத்தில உரையாற்றிய ஜனாதிபதி, பாராளுமன்ற உறுப்பினர்களின் ஓய்வூதியத்தை நீக்குவதற்கு சட்டமூலம் ஒன்றை எதிர்காலத்தில் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கவுள்ளதாகவும் தெரிவித்தார்.
அத்துடன் ஜனாதிபதியின் சலுகைகள் சட்டத்தை திருத்துவதற்கும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் சபையில் தெரிவித்தார்.
சபையில் தொடர்ந்தும் உரையாற்றிய அவர்,
”சில விடயங்களை நாம் இப்போதுதான் தெரிந்து கொண்டுள்ளோம். நான் ஜனாதிபதி பதவியேற்று பின்னர் பாராளுமன்ற உறுப்பினராக இருந்ததற்காக எனக்கு ஓய்வூதியம் கிடைக்கிறது.
அந்த வகையில் ஜனாதிபதியின் சம்பளத்திற்கு மேலதிகமாக பாராளுமன்ற உறுப்பினரின் ஓய்வூதியமும் கிடைக்கிறது. நான் இன்று கடிதம் ஒன்றை பாராளுமன்றத்திற்கு கையளித்துள்ளேன். எனக்கு பாராளுமன்ற உறுப்பினர் ஓய்வூதியம் வேண்டாம் என அதில் நான் குறிப்பிட்டுள்ளேன்.
இந்த நாட்டை கட்டியெழுப்பும் நடவடிக்கையை ஆரம்பிக்க வேண்டும். உண்மையில் எனக்கு அவ்வாறு ஒரு ஓய்வூதியம் கிடைக்கும் என்பது தெரியாது, பின்னர்தான் அது கிடைப்பது தெரியவந்தது. அதனால், அதனை நீக்குமாறு பாராளுமன்றத்திற்கு அறிவித்துள்ளேன்.
அதேபோன்று பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் அமைச்சராகும்போது, பாராளுமன்ற உறுப்பினர் சம்பளமும் கிடைக்கிறது. அமைச்சர் சம்பளமும் கிடைக்கிறது. நாம் ஒரு தீர்மானம் எடுத்தோம், அமைச்சர்களும் பிரதியமைச்சர்களும் பாராளுமன்ற உறுப்பினர் சம்பளத்தை மட்டுமே பெறுவார்கள்.
ஆனால், பாராளுமன்ற உறுப்பினர் சம்பளத்துடன் அமைச்சர்களுக்கு எரிபொருள் கொடுப்பனவு கிடைக்கிறது. பாராளுமன்ற உறுப்பினர் சம்பளத்தின் இருந்து எரிபொருள் கொடுப்பனவையும் நீக்கி, நாம் அதை வழங்கவுள்ளோம்.
அதேபோன்று, பாராளுமன்ற உறுப்பினர்களின் ஓய்வூதியத்தையும் நீக்கவுள்ளோம். ஜனாதிபதி சலுகைகள் சட்டத்தையும் திருத்துவோம்” என்றும் ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.
0 Comments