
இணையவழி மோசடிகள் மற்றும் நிதி மோசடிகளில் ஈடுபடுபவர்களுக்கு எதிராக மிகக் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறை அறிவித்துள்ளது.
குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் (CID) தலைமையகத்தில் புதிதாக நிறுவப்பட்டுள்ள சைபர் குற்றத் தடுப்புப் பிரிவு (Cybercrimes Prevention Unit - CPU) முன்னெடுத்துள்ள விசாரணைகளைத் தொடர்ந்து இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
காவல்துறை ஊடகப் பேச்சாளரும், உதவி காவல்துறை அத்தியட்சகருமான சட்டத்தரணி எப்.யு. வூட்லர் இதனைத் தெரிவித்துள்ளார்.
இதன்படி பொதுமக்கள் தங்களது தனிப்பட்ட தகவல்களையோ அல்லது வங்கி மற்றும் நிதி தொடர்பான விபரங்களையோ எவருக்கும் பகிர வேண்டாம் என அவர் அறிவுறுத்தியுள்ளார்.
மேலும் சமூக வலைத்தளங்கள் மூலம் முன்னெடுக்கப்படும் நிதிமோசடிகள் மற்றும் ஏனைய சட்டவிரோத செயல்களைக் கையாள்வதற்கு சைபர் குற்றத் தடுப்புப் பிரிவு முழுமையான வசதிகளுடன் தயார்ப்படுத்தப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
இவ்வாறான குற்றங்களில் ஈடுபடுவோர் கண்டறியப்பட்டால், அவர்களுக்கு எதிராக காவல்துறை தயவுதாட்சண்யமின்றி நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
சமூக வலைத்தளங்கள் மற்றும் இணையதளங்கள் வாயிலாக நடைபெறும் மோசடிகள் அண்மைக்காலமாகப் பெருமளவில் அதிகரித்துள்ளன.
இதன் காரணமாகவே, விசாரணைகளைத் தீவிரப்படுத்தவும் பொதுமக்களுக்கு முன்கூட்டியே எச்சரிக்கை விடுக்கவும் காவல்துறை தீர்மானித்துள்ளது.



0 Comments