
ஹெச். வினோத் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள 'ஜன நாயகன்' திரைப்படம் நேற்று உலகம் முழுவதும் வெளியாக இருந்த நிலையில் தணிக்கை சான்றிதழ் வழங்கப்படாததால் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இதனால் விஜய் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.
மேலும் 'ஜன நாயகன்' திரைப்படத்திற்கு தணிக்கை சான்றிதழ் வழங்கப்படாததற்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இதனிடையே, 'ஜன நாயகன்' படத் தயாரிப்பு நிறுவன உரிமையாளர் வெங்கட் நாராயணா எக்ஸ் தள பக்கத்தில் காணொளி ஒன்றை வெளியிட்டு, குறித்த சம்பவத்துக்காக மன்னிப்பு கோரியுள்ளார்.
குறித்த காணொளியில், கடந்த டிசம்பர் மாதமே படத்தை தணிக்கை குழுவுக்கு அனுப்பி அவர்கள் சொன்ன திருத்தங்களையும் செய்து மீண்டும் சமர்ப்பித்தோம்.
U/A சான்றிதழ் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் பட வேலைகளை பார்த்துக் கொண்டிருந்த போது, ஜனவரி 5ஆம் திகதி மாலை படத்தை மறு ஆய்வுக் குழுவுக்கு அனுப்புவதாக அதிர்ச்சி செய்தி வந்தது.
மறு ஆய்வுக் குழுவுக்கு செல்ல நேரம் இல்லாததாலும், முறைப்பாடு தெரிவித்தது யார் என்றே தெரியாததாலும் உடனடியாக நீதிமன்றம் சென்றோம். நீதிமன்றம் சான்றிதழ் கொடுக்க உத்தரவிட்ட போதும், தணிக்கை சபை உடனே மேல்முறையீட்டுக்கு சென்றது.
இதனை தொடர்ந்தே இடைக்கால தடை விதிக்கப்பட்டது. ரசிகர்கள், விநியோகஸ்தர்கள், திரையரங்க உரிமையாளர்கள் அனைவரிடமும் தாழ்மையுடன் மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறேன்.
குறிப்பிட்ட திகதியில் திரைப்படத்தைத் திரையிட எல்லா முயற்சிகளையும் மேற்கொண்டோம். ஆனால் அனைத்தும் கையை மீறி சென்று விட்டது. எங்களுக்கு சட்டத்தின் மீது நம்பிக்கை உள்ளது.
இந்த திரைப்படம் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கிறோம் எனக் குறிப்பிட்டுள்ளார்.



0 Comments