
சவுத்ஹாம்ப்டன், ரோஸ் பௌல் விளையாட்டரங்கில் நேற்று (16) செவ்வாய்க்கிழமை இரவு நடைபெற்ற அயர்லாந்துக்கு எதிரான குழு 2 மகளிர் ரி20 உலகக் கிண்ணப் போட்டியில் இங்கிலாந்து 4 விக்கெட்களால் வெற்றியீட்டியது.
எனினும் இந்த வெற்றி இலகுவாக அமையவில்லை. அயர்லாந்தின் பந்துவீச்சுகளைப் பொறுமையாக எதிர்கொண்டே இங்கிலாந்து வெற்றியீட்டி அவசியமான புள்ளிகளைப் பெற்றது.
இந்த வெற்றியுடன் அரை இறுதிக்கான வாய்ப்பு இங்கிலாந்து சற்று அதிகரித்துக்கொண்டது.
அயர்லாந்தினால் நிர்ணயிக்கப்பட்ட 119 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து 17.3 ஓவர்களில் 6 விக்கெட்களை இழந்து 119 ஓட்டங்களைப் பெற்று வெற்றியீட்டியது.
இங்கிலாந்து வெற்றியை அண்மித்துக் கொண்டிருந்தபோது 48 ஓட்டங்களைப் பெற்றிருந்த அணித் தலைவி நெட் சிவர்-ப்றன்ட் உபாதை காரணமாக ஓய்வு பெற்றார்.
ஆனால், போட்டி முடிவடைந்த சற்று நேரத்தில் அவர் தேறியவராக காணப்பட்டார்.
இங்கிலாந்து ஒரு கட்டத்தில் 3 விக்கெட்களை இழந்து 35 ஓட்டங்களை மாத்திரம் பெற்றிருந்தது.
எனினும் நெட் சிவர்-ப்றன்ட், ஹீதர் நைட் (26) ஆகிய இருவரும் 4ஆவது விக்கெட்டில் 64 ஓட்டங்களைப் பகிர்ந்து இங்கிலாந்தை வீழ்ச்சியிலிருந்து மீட்டனர்.
தொடர்ந்து வெற்றிக்கு 9 ஓட்டங்கள் தேவைப்பட்டபோது நெட் சிவர்-ப்றன்ட் ஓய்வு பெற்றார்.
டெனி கிப்சன் (4 ஆ.இ.), சார்ளி டீன் (4 ஆ.இ.) ஆகிய இருவரும் வெற்றிக்கு தேவையான எஞ்சிய ஓட்டங்களைப் பெற்றுக்கொடுத்தனர்.
பந்தவீச்சில் ஏய்மி மெகயர் 23 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் ஓரியா ப்ரெண்டகாஸ்ட் 17 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் வீழ்த்தினர்.
முன்னதாக முதலில் துடுப்பெடுத்தாட அழைக்கப்பட்ட அயர்லாந்து பெரும் சிரமத்துக்கு மத்தியில் 20 ஓவர்களில் 9 விக்கெட்களை இழந்து 118 ஓட்டங்களைப் பெற்றது.
மத்திய வரிசை வீராங்கனைகளான ஓரிய ப்ரெண்டகாஸ்ட் (26), லூயி லிட்டி (26 ஆ.இ.) ஆகிய இருவரே 20 ஓட்டங்களுக்கு மேல் பெற்றனர்.
பந்துவீச்சில் சொஃபி எக்லஸ்டோன் 22 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் டெனி கிப்சன் 10 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் சார்ளி டீன் 11 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.



0 Comments