டுபாயில் இருந்து இலங்கை வந்தவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.
அவர் 39 இலட்சத்து 90 ஆயிரம் ரூபாய் பெறுமதியான வெளிநாட்டு சிகரெட் தொகையை சட்டவிரோதமான முறையில் நாட்டுக்குள் கொண்டு வந்துள்ளார்.
அதனை கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து வெளியே எடுத்துச் செல்ல முயன்ற பயணி இன்று அதிகாலை விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்டவர் கொட்டாரமுல்ல பகுதியைச் சேர்ந்த 40 வயதுடைய வர்த்தகர் ஒருவர் எனத் தெரியவந்துள்ளது.
எயார் அரேபியா விமானம்
இவர் இன்று அதிகாலை 03.30 மணியளவில் சார்ஜாவிலிருந்து எயார் அரேபியா நிறுவனத்திற்கு சொந்தமான G-9587 என்ற விமானம் மூலம் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளார்.

இதன்போது, அவர் கொண்டு வந்த 02 பயணப்பொதிகளுக்குள் வெளிநாட்டில் தயாரிக்கப்பட்டமென்செஸ்டர் மற்றும் பிளாட்டினம் ரகங்களைச் சேர்ந்த, 26,600 சிகரெட்டுகள் அடங்கிய 133 சிகரெட் அட்டைகளை மறைத்து வைத்திருந்ததாக பொலிஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது சந்தேக நபர் பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளதுடன், எதிர்வரும் 16ஆம் திகதி இந்த சிகரெட் தொகையுடன் அவரை மேலதிக விசாரணைகளுக்காக நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.



0 Comments