Trending

6/recent/ticker-posts

Live Radio

பொலிஸ் மரியாதையுடன் இடம்பெற்ற முன்னாள் பொலிஸ் மா அதிபர் சி.டி.விக்ரமரத்னவின் இறுதிக்கிரியைகள்...!


இலங்கை பொலிஸ் சேவையில் இணைந்து சுமார் 37 வருடங்களாக இந்நாட்டுக்காகக் கடமையாற்றிய 35 ஆவது பொலிஸ் மா அதிபரான, அண்மையில் காலமான சி.டி. விக்ரமரத்னவின் இறுதிக்கிரியைகள் இன்று திங்கட்கிழமை (20) பொரளை பொது மயானத்தில் உத்தியோகபூர்வ பொலிஸ் மரியாதையுடன் இடம்பெற்றது.

தனியார் மலர்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்த அந்நாரின் பூதவுடலுக்கு பொலிஸ் மரியாதை அளிக்கப்பட்டதைத் தொடர்ந்து, குடும்பத்தார், உறவினர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் உள்ளிட்ட பலரின் கண்ணீர் மத்தியிற்கு மத்தியில் பூதவுடல் பொரளை பொது மயானத்துக்குக் கொண்டு செல்லப்பட்டு தகனம் செய்யப்பட்டது.

மாலபே, தலாஹேன பராக்கிரம மாவத்தையில் அமைந்துள்ள அவரது வீட்டில் வைத்து கடந்த 17 ஆம் திகதி காலை முன்னாள் பொலிஸ் மா அதிபர் துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுடன் மீட்கப்பட்டு, முல்லேரியா கொழும்பு கிழக்கு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்திருந்தார்.
Geographic Reference

அவர் தனது மெய்பாதுகாவலரின் துப்பாக்கியால் சுட்டுக்கொண்டு தற்கொலை செய்துகொண்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர். இச்சம்பவம் குறித்து மேல் மாகாண தெற்கு குற்றத்தடுப்புப் பிரிவு மற்றும் மாலபே பொலிஸார் இணைந்து இரு விசேட பொலிஸ் குழுக்கள் ஊடாக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

தனது மகன் சம்பந்தப்பட்ட நீதிமன்ற விவகாரம் ஒன்றின் காரணமாக அவர் கடும் மன உளைச்சலில் இருந்ததாக அவரது மனைவி வாக்குமூலம் அளித்துள்ளார். பொலிஸ் சேவையின் 35 ஆவது பொலிஸ் மா அதிபரான சி.டி.விக்ரமரத்ன, பொலிஸ் வரலாற்றில் புலனாய்வு அதிகாரி ஒருவராகப் பணியைத் தொடங்கி பொலிஸ் மா அதிபர் நிலையை அடைந்த முதலாவது அதிகாரியாவார். 1963 மார்ச் 26 இல் பிறந்த இவர், கொழும்பு ஆனந்தா கல்லூரி உள்ளிட்ட பாடசாலைகளின் பழைய மாணவராவார். கொழும்பு பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்ற பின்னர், 1986 ஜூன் 16 இல் உதவி பொலிஸ் அத்தியட்சகராக பொலிஸ் சேவையில் இணைந்து கொண்டார்.

2020 நவம்பரில் அப்போதைய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் இவர் பொலிஸ் மா அதிபராக நியமிக்கப்பட்டிருந்தார். அவர் 2023 ஆம் ஆண்டு ஓய்வு பெற வேண்டிய நிலையில் நான்கு முறை சேவை நீடிப்புகளைப் பெற்று 2023 நவம்பர் 27 ஆம் திகதி அன்று சேவையிலிருந்து ஓய்வு பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது. பிரேத பரிசோதனைகளின் பின்னர் குடும்பத்தாரிடம் ஒப்படைக்கப்பட்ட, முன்னாள் பொலிஸ் மா அதிபரின் பூதவுடல் பொரளையில் உள்ள தனியார் மலர்சாலையில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்தது. அவரது குடும்பத்தார் மற்றும் நெருங்கிய உறவுகளும் கண்ணீருக்கு மத்தியில் அவருக்குப் பிரியாவிடை அளித்திருந்தனர்.

பிற்பகல் 3.00 மணியளவில் பௌத்த மத வழிபாடுகள் இடம்பெற்று மௌனஞ்சலி செலுத்தப்பட்டது. பின்னர் மாலை 4.00 மணியளவில் முன்னாள் பொலிஸ் மா அதிபரின் பூதவுடல் அடங்கிய பேழை அவரது குடும்ப உறவுகளால் தனியார் மலர்சாலையிலிருந்து கொண்டு செல்லப்பட்டு, பொலிஸாரிடம் கையளிக்கப்பட்டது. இந்நிலையில் பொது மயானத்தின் முன்பாக மாலை 4.15 மணியளவில் பொலிஸாரின் மரியாதை அணிவகுப்பைத் தொடர்ந்து, அந்நாரது பூதவுடல் தாங்கிய பேழை வாகனத்தில் வைக்கப்பட்டு பொலிஸ் அணிவகுப்போடு மயானத்துக்குக் கொண்டு செல்லப்பட்டது.

மேலும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மற்றும் ஏனைய சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகள் பலரும் அவருக்கு இறுதி மரியாதை செலுத்தியிருந்ததோடு, அவர் இந்நாட்டுக்கு வழங்கிய சேவையினை நினைவூட்டி, அவரது சேவைக்கான கௌரவத்தையும் வழங்கியிருந்தனர். குடும்பத்தாரின் ஆறாத் துயரத்தோடும் அங்கு கூடியிருந்தோரது கண்ணீருக்கு மத்தியிலும் அந்நாரின் பூதவுடல் நேற்றைய தினம் பிற்பகல் நல்லடக்கம் செய்யப்பட்டது.

மேலும் அவரது பூதவுடல் அஞ்சலிக்காக தனியார் மலர்சாலையில் வைக்கப்பட்டிருந்த போது முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, முன்னாள் சபாநாயகர் சமல் ராஜபக்ஷ, தயாசிரி சிறிசேன, மஹிந்த அமரவீர, டட்ளி சிறிசேன, முன்னாள் பொலிஸ்மா அதிபர் தேஷபந்து தென்னகோன் உள்ளிட்டோரும், நேற்றைய தினம் ஷிராந்தி ராஜபக்ஷ, ரவி கருனாநாயக்க ,சனத் ஜயசூரிய, நவீன் திஸாநாயக்க, வஜிர அபேவர்தன, சரத் வீரசேகர, எஸ்.எம். சந்திரசேன உள்ளிட்ட அரசியல் பிரமுகர்களும் இந்திய உயர்ஸ்தானிகரக அதிகாரிகள் ஆகிய முக்கிய பிரதிநிதிகளும் நேற்றைய தினம் முன்னாள் பொலிஸ் மா அதிபருக்கு தங்களது இறுதி மரியாதையினைச் செலுத்தியிருந்தனர்.

Post a Comment

0 Comments