Trending

6/recent/ticker-posts

Header Ads Widget

தேசிய தேர்தல்கள் தாமதமின்றி உரிய காலத்தில் நடத்தப்படுவது அவசியம் - இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் வலியுறுத்தல் !




நாட்டின் தேசிய தேர்தல்கள் பிற்போடப்படக்கூடாது எனவும், அவை உரியகாலத்தில் ஜனநாயகமுறைப்படி நடத்தப்படவேண்டியது அவசியம் எனவும் இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

நாட்டின் பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்தும் நோக்கில் ஜனாதிபதித்தேர்தல் மற்றும் பொதுத்தேர்தலை இரண்டு வருடங்களுக்கு ஒத்திவைக்கவேண்டும் எனவும், அதனை முன்னிறுத்தி பாராளுமன்றத்தில் பிரேரணையொன்றைக் கொண்டுவரவேண்டும் எனவும் ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச்செயலாளர் பாலித்த ரங்கே பண்டார தெரிவித்துள்ளார். வாக்களிப்பதற்கான மக்களின் உரிமையை உறுதிப்படுத்தும் வகையில் உரிய காலப்பகுதியில் தேர்தல்கள் நடாத்தப்படவேண்டும் என பல்வேறு தரப்பினராலும் வலியுறுத்தப்பட்டுவரும் நிலையில், பாலித்த ரங்கே பண்டாரவின் இக்கருத்து கடும் விமர்சனங்களுக்கு உள்ளாகியிருக்கின்றது.

இந்நிலையில் ஜனாதிபதித்தேர்தல் மற்றும் பொதுத்தேர்தல் உள்ளடங்கலாக நாட்டின் தேசிய தேர்தல்களைப் பிற்போடுவதை தாம் முற்றாக எதிர்ப்பதாகவும், அத்தேர்தல்கள் உரிய காலப்பகுதியில் நடத்தப்படவேண்டியது அவசியம் எனவும் இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் கௌஷல்ய நவரத்ன வலியுறுத்தியுள்ளார்.

அதேவேளை இதுகுறித்து அபிப்பிராயம் வெளியிட்ட இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் முன்னாள் தலைவர் ஜனாதிபதி சட்டத்தரணி சாலிய பீரிஸ், அரசியலமைப்பில் திருத்தம் செய்வதன் ஊடாக மாத்திரமே ஜனாதிபதியின் பதவிக்காலத்தை நீடிக்கமுடியும் என சுட்டிக்காட்டியுள்ளார். 'அரசியலமைப்பின் 83(பி) சரத்தின் பிரகாரம் அவ்வாறானதொரு திருத்தத்துக்கு பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை ஆதரவும், அதனைத்தொடர்ந்து பொதுசன வாக்கெடுப்பின் ஊடாக மக்களின் அனுமதியும் அவசியமாகும். மாறாக மூன்றில் இரண்டு பெரும்பான்மையின்றி அவ்வாறானதோர் திருத்த முன்மொழிவை மக்கள் வாக்கெடுப்புக்குக் கொண்டுசெல்லமுடியாது' என அவர் விளக்கமளித்துள்ளார்.

அதுமாத்திரமன்றி 1982 ஆம் ஆண்டு இலங்கையில் இடம்பெற்ற ஒரேயொரு பொதுசன வாக்கெடுப்பின் ஊடாக பாராளுமன்றத்தின் பதவிக்காலம் நீடிக்கப்பட்டமையின் மூலம் எமது நாடு மிகமோசமான அழிவை நோக்கிக் கொண்டுசெல்லப்பட்ட வரலாற்றை மறந்துவிடக்கூடாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Post a Comment

0 Comments