கடந்த வியாழக்கிழமை (19) முள்ளிவாய்க்கால் மேற்கு கடற்கரையில் 115 பயணிகளுடன் கரை ஒதுங்கிய மியன்மார் படகு கடந்த வெள்ளிக்கிழமை (20) திருகோணமலை அஷ்ரப் துறைமுகத்துக்கு கொண்டுவரப்பட்டது. அதன் பின்னர், அன்றைய தினம் மாலை குறித்த பயணிகள் திருகோணமலை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டிருந்தனர்.
திருகோணமலை ஜமாலியா முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் தங்கவைக்கப்பட்டிருந்த மியன்மார் – ரோஹிங்யா அகதிகள் முல்லைத்தீவு கேப்பாப்பிலவு விமானப்படை முகாமில் தங்க வைப்பதற்காக இன்று (23) அழைத்துச் செல்லப்பட்டனர்.
பொலிஸாருக்கு சொந்தமான இரு பஸ்களில் குறித்த அகதிகள் 103 பேரும் பொலிஸ் பாதுகாப்புடன் இன்று (23) காலை 7.30 மணியளவில் அழைத்துச் செல்லப்பட்டிருந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த மக்கள் மிரிஹானை முகாமுக்கு அழைத்துச் செல்லப்படுவதாக கூறப்பட்டிருந்த நிலையில் கேப்பாப்பிலவு முகாமுக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்போது 12 மாலுமிகள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டதுடன் ஏனைய 103 பயணிகளும் திருகோணமலை ஜமாலியா முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் தங்க வைக்கப்பட்டு அவர்களுக்கான வசதிகள் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டிருந்தன.
இந்நிலையில், மிரிஹானை இடைத்தங்கல் முகாமில் தங்கவைப்பதற்காக கடந்த சனிக்கிழமை (21) மியன்மார் அகதிகள் அழைத்துச் செல்லப்பட்டிருந்தனர். எனினும், குடிவரவு குடியகல்வு திணைக்களம் அனுமதி வழங்காததன் காரணமாக அவர்கள் மீள திருகோணமலைக்கு திருப்பி அனுப்பப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
0 Comments