Trending

6/recent/ticker-posts

Header Ads Widget



இஸ்ரேலின் தொடரும் தாக்குதல்; காசாவில் ‘முழு அளவில் பஞ்ச’ அபாயம்…!!



இஸ்ரேல் தொடர்ந்து நடத்தும் தாக்குதல்களில் காசாவில் மேலும் பலர் கொல்லப்பட்டிருக்கும் நிலையில் இஸ்ரேலின் முற்றுகைக்கு மத்தியில் ‘முழு அளவில் பஞ்சம் ஒன்று ஏற்படும்’ சூழல் தொடர்பில் தொண்டு அமைப்புகள் எச்சரித்துள்ளன.

காசாவுக்கான உதவிகள் செல்வதை இஸ்ரேல் கடந்த இரண்டு மாதங்களாக முடக்கி இருக்கும் நிலையில் அங்கு உணவு, மருந்து, எரிபொருள் உட்பட அனைத்து அடிப்படை தேவைகளும் தீர்ந்து வருவதாக எச்சரிக்கப்பட்டுள்ளது.

‘காசாவில் எதிர்வரும் நாட்கள் தீர்க்கமானதாக அமையவுள்ளன. குண்டுகள் மற்றும் ரவைகளால் கொல்லப்படாதவர்கள் மெதுவாக உயிரிழந்து வருகின்றனர்’ என்று ஐ.நாவின் மனிதாபிமான நிறுவன தலைவர் ஜொனதன் விட்டோல் எச்சரித்துள்ளார். காசா நகரில் நேற்று முன்தினம் (26) நடந்த செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்தார்.

‘மனிதாபிமான உதவியாளர்களாக உதவிகள் மறுக்கப்படுவதை ஓர் ஆயுதமாக பயன்படுத்தப்படுவதை எம்மால் பார்க்க முடிகிறது. மனிதாபிமான உதவிகள் மறுக்கப்படுவதற்கு எந்த நியாயமும் கூற முடியாது’ என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

காசாவில் உலக உணவுத் திட்டத்தின் கையிருப்புகள் தீர்ந்து வருவதை உறுதி செய்த விட்டோல் அர்த்தபூர்வமான உணவு விநியோகங்கள் எதுவும் தற்போது இடம்பெறவில்லை என்றும் தெரிவித்தார்.

உலக உணவுத் திட்டம் வெளியிட்ட அறிவிப்பில், காசா பகுதியில் விநியோகிப்பதற்கு ‘சரிட்டி கிட்சன்’ அமைப்புக்கு கடைசி விநியோகங்களை வழங்கியதாகவும், அந்த உணவுகள் சில நாட்களுக்குள் தீர்ந்துவிடும் என்றும் எச்சரித்தது.

மாவு மற்றும் சமையல் எரிவாயு தீர்ந்த நிலையில் கடந்த மார்ச் 31 ஆம் திகதி உலக உணவுத் திட்டத்தின் ஆதரவுடனான காசாவில் உள்ள 25 பேக்கரிகளும் மூடப்பட்டதோடு குடும்பங்களுக்கு வழங்கப்படும் இரண்டு வாரங்களுக்கு போதுமான உணவுப் பொதிகளும் தீர்ந்துள்ளன.

பஞ்சம் அச்சுறுத்தல் நிலையை தாண்டி உண்மையாகி வருவதாக காசா ஊடக அலுவலகம் வெள்ளிக்கிழமை (25) வெளியிட்ட அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. ‘தமது குழந்தைகளுக்கு ஒரு வேளை உணவைக் கூட வழங்க முடியாத நிலையில் ஆயிரக்கணக்கான பலஸ்தீன குடும்பங்கள் பட்டினியை எதிர்கொண்டுள்ளன’ என்று அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

காசாவில் 50 குழந்தைகள் உட்பட 52 பேர் பட்டினி மற்றும் ஊட்டச்சத்து குறைப்பாட்டால் உயிரிழந்திருப்பதோடு ஒரு மில்லியனுக்கும் அதிகமான மக்கள் தினசரி பட்டினி நிலையை எதிர்கொண்டிருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

காசா பகுதியை முழுமையாக முடக்கிய நிலையிலேயே இஸ்ரேல் அங்கு தொடர்ந்து உக்கிர தாக்குதல்களை நடத்தி வருகிறது. காசா நகரின் செய்தூன் பகுதியில் இஸ்ரேல் நேற்று காலை நடத்திய வான் தாக்குதல் ஒன்றில் இரு சிறுமிகள் உட்பட பலஸ்தீனர்கள் மூவர் கொல்லப்பட்டதாக உள்ளூர் தரப்புகளை மேற்கோள்காட்டி செய்தி வெளியாகியுள்ளது.

மறுபுறம் கடந்த சனிக்கிழமை இரவு மத்திய காசாவின் பல பகுதிகளிலும் இஸ்ரேல் நடத்திய வான் தாக்குதல்களில் பத்து பேர் கொல்லப்பட்டதோடு மேலும் பலர் காயமடைந்திருப்பதாக பலஸ்தீன செய்தி நிறுவனமான வபா தெரிவித்துள்ளது. இதில் அல் மகாசி அகதி முகாமுக்கு வடக்காக பொதுமக்கள் குழுவொன்றின் மீது நடத்தப்பட்ட குண்டு தாக்குதலில் ஐவர் கொல்லப்பட்டிருப்பதோடு அல் சவைதா சிறு நகரில் இஸ்ரேலிய படை மேற்கொண்ட ஆளில்லா விமான தாக்குதல்களில் மேலும் நால்வர் பலியாகியுள்ளனர். குறிப்பாக கடந்த சனிக்கிழமை காசா மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களில் குறைந்தது 40 பலஸ்தீனர்கள் கொல்லப்பட்டதாக அங்கிருந்து வரும் செய்திகள் கூறுகின்றன.

இந்நிலையில் காசாவில் கொல்லப்பட்ட பலஸ்தீனர்கள் எண்ணிக்கை 51,495 ஆக அதிகரித்திருப்பதோடு மேலும் 117,524 பேர் காயமடைந்திருப்பதாக காசா சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இரண்டு மாத போர் நிறுத்தத்தின் பின்னர் கடந்த மார்ச் நடுப்பகுதியில் இஸ்ரேல் மீண்டும் தாக்குதல்களை ஆரம்பித்ததை அடுத்தே போர் நிறுத்தம் முடிவுக்கு வந்தது. மீண்டும் போர் நிறுத்தம் ஒன்றை எட்டுவதற்கான முயற்சிகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றபோதும் இதுவரை குறிப்பிடத்தக்க முன்னேற்றம் எட்டப்படவில்லை.

போர் நிறுத்த பேச்சுவார்த்தைகளுக்காக கெய்ரோவில் உள்ள மத்தியஸ்தர்களை சந்தித்த ஹமாஸ் பிரதிநிதிகள் காசாவில் இஸ்ரேலுடன் பல ஆண்டு போர் நிறுத்தம் ஒன்றுக்கு இணக்கத்தை வெளியிட்டிருந்தபோதும் ஆயுதங்களை களைவதை நிராகரித்துள்ளது.

காசாவில் போரை முடிவுக்குக் கொண்டுவரும் வகையில் ஐந்து தொடக்கம் ஏழு ஆண்டுகள் போர் நிறுத்தம் ஒன்றுக்கு ஹமாஸ் இணக்கத்தை வெளியிடும் வகையில் மத்தியஸ்தர்கள் இடையே அந்த அமைப்பு நம்பிக்கையை வளர்த்து வருவதாக இந்த பேச்சுவார்த்தை தொடர்பான நெருக்கமான வட்டாரங்களை மேற்கோள்காட்டி ரோய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

‘போர் நிறுத்தம் ஒன்று அல்லது அதன் காலம் பற்றிய திட்டத்தை நாம் நிராகரிக்கவில்லை என்பதோடு பேச்சுவார்த்தை கட்டமைப்புக்குள் அதனை விவாதிக்க நாம் தயாராக உள்ளோம். போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கு எந்த தீவிரமான முன்மொழிவுக்கும் நாம் தாயாராக உள்ளோம்’ என்று ஹமாஸ் தலைமைக்கான ஊடக ஆலோசகர் தாஹிர் அல் நொனோ குறிப்பிட்டுள்ளது.

எவ்வாறாயினும் ஹமாஸ் தனது அயுதங்களை களைய வேண்டும் என்ற இஸ்ரேலின் பிரதான கோரிக்கையை நொனோ நிராகரித்துள்ளார். காசாவை இராணுவமற்ற பகுதியாக மாற்ற இஸ்ரேல் வலியுறுத்தி வருகிறது.

‘ஆயுத போராட்டம் பேச்சுவார்த்தைக்கு உட்பட்டதல்ல என்பதோடு ஆக்கிரமிப்பு இருக்கும் வரை எமது கைகளில் ஆயுதம் தொடர்ந்து இருக்கும்’ என்று நொனோ குறிப்பிட்டார்.

எவ்வாறாயினும் இஸ்ரேலின் பிரதான கோரிக்கை நிறைவேற்றப்படும் வரை போர் நிறுத்தம் ஒன்றை எட்டும் வாய்ப்பு குறைவாக இருப்பதாக இஸ்ரேலிய பிரதி வெளியுறவு அமைச்சர் ஷர்ரன் ஹஸ்கல் குறிப்பிட்டார். ‘ஹமாஸ் எஞ்சியுள்ள 59 பணயக்கைதிகளையும் விடுவித்து ஆயுதங்களை கீழே வைத்தால் போர் நாளைக்கே முடிவுக்கு வரும்’ என்று ஹஸ்கல் கடந்த வாரம் ஜெரூசலத்தில் வைத்து குறிப்பிட்டிருந்தார்.

Post a Comment

0 Comments