
சட்டவிரோதமாக நாட்டுக்கு கொண்டுவரப்பட்ட நவீன கையடக்கத் தொலைபேசிகள் மற்றும் ஏலக்காய் தொகையுடன் வர்த்தகர் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து விமான நிலைய சுங்க அதிகாரிகளால் இன்று வியாழக்கிழமை (28) காலை கைது செய்யப்பட்டுள்ளார்.
கைதுசெய்யப்பட்டவர் கொழும்பு பிரதேசத்தைச் சேர்ந்த 36 வயதுடைய வர்த்தகர் ஆவார்.
சந்தேக நபரான வர்த்தகர் டுபாயில் இருந்து இன்றைய தினம் காலை 07.00 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளார்.
பின்னர் சந்தேக நபரான வர்த்தகர் கட்டுநாயக்க விமான நிலையத்தின் ( Green Channel ) வழியாக விமான நிலையத்தை விட்டு வெளியேற முயன்ற போது விமான நிலைய சுங்க அதிகாரிகளால் சோதனைக்குட்படுத்தப்பட்டுள்ளார்.
இதன்போது சந்தேக நபரான வர்த்தகர் கொண்டு வந்த பயணப்பொதிகளில் இருந்து 165 நவீன கையடக்கத் தொலைபேசிகள் மற்றும் 102 கிலோ கிராம் ஏலக்காய் தொகை கைப்பற்றப்பட்டுள்ளன.
கைப்பற்றப்பட்ட நவீன கையடக்கத் தொலைபேசிகள் மற்றும் 102 கிலோ கிராம் ஏலக்காய் தொகையின் மொத்த பெறுமதி 2 கோடி ரூபா என விமான நிலைய சுங்க அதிகாரிகள் தெரிவித்தனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை விமான நிலைய சுங்க அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.
0 Comments