இந்தோனேசிய கடல்சார் விவகாரம் மற்றும் மீன்பிடி அமைச்சினால் இயக்கப்படும் ATR 42-500 ரக விமானம் ஒன்று, இன்று மகாசர் நகருக்கு அருகே பறந்து கொண்டிருந்தபோது திடீரென மாயமானது.
மகாசரில் உள்ள சுல்தான் ஹசனூதின் சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்க சில நிமிடங்களே இருந்த நிலையில், பிற்பகல் 1:17 அளவில் கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பை இந்த விமானம் இழந்தது.
விமானத்தில் 8 ஊழியர்களும் 3 பயணிகளும் இருந்ததாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது
மகாசர் விமான நிலையத்திற்கு வடகிழக்கே சுமார் 20 கிலோமீற்றர் தொலைவில் உள்ள லியாங்-லியாங் மலைப்பகுதியில் விமானம் மாயமாகியுள்ளது.
இந்தோனேசியாவின் தேசிய தேடுதல் மற்றும் மீட்பு முகவரகம் மற்றும் காவல்துறையினர் இணைந்து மாயமான விமானத்தைத் தேடும் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
இதனிடையே, விமானம் மாயமானதாகக் கூறப்படும் மலைப்பகுதிகளில் இருந்து கரும்புகை எழும்புவது, விமானத்தின் பாகங்கள் சிதறிக் கிடப்பது போன்ற காணொளிகள் சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றன.
தற்போது மீட்புக் குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ள நிலையில், மேலதிக தகவல்கள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.




0 Comments