
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், ஈரான் மீதான தாக்குதலை இரண்டு வாரங்களுக்கு நிறுத்தியுள்ள முடிவை இஸ்ரேல் வரவேற்றுள்ளது. எனினும், இந்த போர்நிறுத்தம் லெபனான் மீது பொருந்தாது என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார்.
சர்வதேச ஊடகங்கள் வெளியிட்டுள்ள தகவலின்படி, இஸ்ரேல் பிரதமரின் அலுவலகம் வெளியிட்ட அறிக்கையில், அமெரிக்காவின் இந்த முடிவுக்கு ஆதரவு தெரிவித்ததுடன், சில முக்கிய நிபந்தனைகளையும் வலியுறுத்தியுள்ளது.
அதன்படி, ஈரான் உடனடியாக ஹோர்மூஸ் நீரிணை கடல் வழித்தடத்தை திறக்க வேண்டும் என்பதோடு, அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் பிராந்திய நாடுகளுக்கு எதிரான தாக்குதல்களையும் நிறுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், அமெரிக்கா முன்னெடுத்து வரும் பதற்ற தணிப்பு முயற்சிகளுக்கும், பேச்சுவார்த்தைக்கான சூழலை உருவாக்கும் நடவடிக்கைகளுக்கும் இஸ்ரேல் ஆதரவு தெரிவித்துள்ளது.
அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் அதன் அரபு அண்டை நாடுகளுக்கு ஈரான் இனி அணு ஆயுதம், ஏவுகணை அல்லது “பயங்கரவாத” அச்சுறுத்தலாக இருக்கக்கூடாது என்ற அமெரிக்காவின் நோக்கத்தையும் ஆதரிப்பதாக இஸ்ரேல் மேலும் தெரிவித்துள்ளது. இதனை அடைய எதிர்வரும் பேச்சுவார்த்தைகளில் இணைந்து செயல்பட உறுதியளிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதேவேளை, ஈரான் மற்றும் அமெரிக்கா இடையிலான பேச்சுவார்த்தைகள் ஏப்ரல் 10 ஆம் திகதி இஸ்லாமபாத் நகரில் தொடங்கவுள்ளதாக ஈரான் தரப்பு அறிவித்துள்ளது.
இந்த முன்னேற்றங்கள் மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் பதற்ற நிலையை குறைக்கும் முக்கிய கட்டமாகக் கருதப்படுகின்றன.



0 Comments