Trending

6/recent/ticker-posts

Live Radio

வாகனப் பிரியர்களுக்கு நற்செய்தி...!!



இலங்கையின் பொருளாதார நிலைமைகள் மேலும் வலுப்பெறும் பட்சத்தில், எதிர்காலத்தில் வாகனங்கள் மீதான வரிகளை தளர்த்துவது குறித்து அரசாங்கம் பரிசீலிக்கக்கூடும் என வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.

இலங்கை வாகன இறக்குமதியாளர்கள் சங்கம் (CAIA) ஏற்பாடு செய்திருந்த “Motor Rally 2026” வாகனக் கண்காட்சி அணிவகுப்பில் நேற்று (16) உரையாற்றிய போதே அமைச்சர் இதனைத் தெரிவித்துள்ளார்.

அரசாங்கம் படிப்படியாக இறக்குமதிக் கட்டுப்பாடுகளை தளர்த்தி வருவதன் மூலம், பொதுமக்கள் வாகனங்களை கொள்வனவு செய்வதற்கான அதிக வாய்ப்புகள் உருவாகி வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் நாட்டில் வாகன இறக்குமதி முற்றாக இடைநிறுத்தப்பட்டிருந்ததால், வெளிநாடுகளில் இருந்து வாகனங்களை இறக்குமதி செய்வதற்கான வாய்ப்பு இல்லாத நிலை காணப்பட்டதாக அமைச்சர் நினைவுகூர்ந்தார்.

எனினும், ஒப்பீட்டளவில் குறுகிய காலத்திற்குள் வாகன இறக்குமதியை மீண்டும் ஆரம்பிக்க அரசாங்கத்தால் முடிந்துள்ளதாகவும், தற்போதைய நடைமுறையின் கீழ் பல்வேறு வகையான வாகனங்களை நாட்டிற்கு இறக்குமதி செய்ய முடியும் என்றும் அவர் தெரிவித்தார்.

மத்திய கிழக்கில் நிலவும் மோதல் காரணமாக சில தற்காலிக கட்டுப்பாடுகளை விதிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

எனினும், இந்தக் கட்டுப்பாடுகள் குறுகிய காலத்திற்கே அமுலில் இருக்கும் எனவும், நிலைமை சீரடைந்த பின்னர் அவை படிப்படியாக நீக்கப்படும் எனவும் அவர் வலியுறுத்தினார்.

நாட்டின் பொருளாதாரம் வலுப்பெற்றதன் காரணமாகவே கட்டுப்படுத்தப்பட்ட நடைமுறையின் கீழ் வாகன இறக்குமதி மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் விஜித ஹேரத் குறிப்பிட்டார்.

எதிர்காலத்தில் பொருளாதார நிலைமைகள் மேலும் மேம்படும் பட்சத்தில், வாகனங்கள் மீதான வரிகளை குறைப்பது மற்றும் பொதுமக்களுக்கு வாகனங்களை கொள்வனவு செய்வதற்கான அதிக வாய்ப்புகளை ஏற்படுத்துவது தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்தும் என்றும் அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.

Post a Comment

0 Comments