
ஸ்கொட்டிஷ் தேசியக் கட்சியின் தலைவர் ஜோன் ஸ்வினி , ஸ்கொட்லாந்து பாராளுமன்றத்தில் நடைபெற்ற மூன்று சுற்று வாக்கெடுப்புகளின் பின்னர் மீண்டும் முதல் அமைச்சராக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
செவ்வாய்க்கிழமை நடைபெற்ற இந்த வாக்கெடுப்பில் ஐந்து எதிர்க்கட்சி வேட்பாளர்களை தோற்கடித்து, ஜோன் ஸ்வினி 56 வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றார். இதனைத் தொடர்ந்து, மன்னர் சார்லஸினால் வழங்கப்படும் அரச ஆணைப் பத்திரத்தின் மூலம் அவர் உத்தியோகபூர்வமாக நியமிக்கப்பட்டு, புதன்கிழமை பதவியேற்கவுள்ளார்.
தனது தேர்தல் வெற்றிக்குப் பின்னர் நாடாளுமன்றத்தில் உரையாற்றிய ஸ்வினி, "நான் ஸ்கொட்லாந்து மக்கள் அனைவருக்குமான முதலமைச்சராகச் செயற்படுவேன்" என உறுதியளித்துள்ளார்.
1999 ஆம் ஆண்டு முதல் ஸ்கொட்லாந்து நாடாளுமன்ற உறுப்பினராக இருந்து வரும் ஜோன் ஸ்வினி, 2024 ஆம் ஆண்டு கட்சித் தலைமையை ஏற்றதைத் தொடர்ந்து ஸ்கொட்லாந்து அரசாங்கத்தை வழிநடத்தி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த மே 7 ஆம் திகதி நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில், மொத்தம் உள்ள 129 ஆசனங்களில் ஜோன் ஸ்வினியின் 'எஸ்பிஎன்' கட்சி 58 ஆசனங்களை வென்று மிகப்பெரிய கட்சியாக உருவெடுத்தது. எனினும், பெரும்பான்மையை நிரூபிக்கத் தேவையான 65 ஆசனங்களை அக்கட்சியினால் பெற முடியாமல் போன நிலையிலேயே, இந்த நாடாளுமன்ற வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.



0 Comments