
அதிவேக நெடுஞ்சாலைகளில் பயணிக்கும் சகல வாகனங்களிலும் ஆசனப்பட்டி அணியும் நடவடிக்கை, எதிர்வரும் 19ஆம் திகதி முதல் கட்டாயமாக்கப்படுமென போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அபிவிருத்தி அமைச்சர் பிமல் ரத்நாயக்க நேற்று (08) சபையில் அறிவித்தார்.
பாராளுமன்றத்தில் நேற்று இடம்பெற்ற மோட்டார் வாகன கட்டளைச் சட்டத்தின் ஒழுங்குவிதிகள் மீதான விவாதத்தில் உரையாற்றுகையிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,
பயணிகள் போக்குவரத்துச் சேவையில் ஈடுபடும் பஸ்கள், வேன் மற்றும் முச்சக்கரவண்டிகள் மூன்று மாதத்துக்கு ஒருமுறை தமது வாகனத்தின் தரம் தொடர்பில் பரிசீலனைசெய்து உரிய சான்றிதழைப் பெற்றுக்கொள்ள வேண்டும்.
கடந்த காலங்களில் இடம்பெற்ற வீதி விபத்துகள் தொடர்பில் முறையான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. வாகனங்களின் தரம் தொடர்பில் முறையான பரிசீலனை செய்யாமல் அவற்றைப் பயன்படுத்தியுள்ளமை இவ்வாறான விபத்துகளுக்குக் காரணமாக அமைந்துள்ளதென்பது தெளிவாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளது.
வீதி விபத்துகளைக் கட்டுப்படுத்த வேண்டுமாயின் சட்டங்களையும் ஒழுங்குவிதிகளையும் கட்டாயப்படுத்த வேண்டும். ஏனெனில், ஏனைய நாடுகளை விட இலங்கையில் வீதி போக்குவரத்து தொடர்பில் திருப்திகரமான தன்மை கிடையாது. இந்த நிலைமையை மாற்றி யமைக்க வேண்டும்.
வீதி விபத்துகளைத் தடுப்பதற்கு கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும். அதிவேக நெடுஞ்சாலை வீதிகளில் பயணிக்கும் சகல வாகனங்களிலும் ஆசனப்பட்டி அணிதல் எதிர்வரும் 19ஆம் திகதி முதல் கட்டாயமாக்கப்படும் என்றார்.



0 Comments