Trending

6/recent/ticker-posts

Header Ads Widget

Mandous சூறாவளி: நாட்டின் பல பகுதிகளில் 100 மி.மீ. இற்கு அதிக பலத்த மழை...!


'Mandous' (மாண்டஸ்) சூறாவளியின் தாக்கம் காரணமாக இன்றையதினம் (08) வடக்கு, வடமத்திய, கிழக்கு, ஊவா, மத்திய, வடமேற்கு மாகாணங்களின் சில இடங்களில் 100 மி.மீ. இற்கும் அதிக பலத்த மழை பெய்யும் சாத்தியம் காணப்படுவதாக, வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

தென்கிழக்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளில் (திருகோணமலைக்கு கிழக்காக 360 கிலோ மீட்டர் தூரத்தில்) நிலை கொண்டுள்ள ஆழ்ந்த தாழமுக்கமானது 'Mandous' என்ற ஒரு சூறாவளியாக வலுவடைந்து தற்போது வட அகலாங்கு 9.4 N இற்கும் கிழக்கு நெட்டாங்கு 84.1 E இற்கும் அருகில் மையம் கொண்டுள்ளதாக திணைக்களம் தெரிவித்துள்ளது.

அது மேற்கு- வடமேற்கு திசையில் நகர்ந்து, நாளை (09) இரவுப் பொழுதில் தென்மேற்கு வங்காள விரிகுடா கடற்பரப்பில் வட தமிழ்நாடு, பாண்டிச்சேரி, தென் ஆந்திரப் பிரதேச கரையோரப் பிரதேசங்களை அடையக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் மேக மூட்டமான வானம் காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

வடக்கு, வடமத்திய, கிழக்கு மாகாணங்களில் அவ்வப்போது மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. வடக்கு மாகாணத்திலும் திருகோணமலை மாவட்டத்திலும் சில இடங்களில் சில இடங்களில் 100 மி.மீ. இற்கும் அதிகமான பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.

வடக்கு, வடமத்திய, கிழக்கு மாகாணங்களில் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 60-70 கிலோ மீற்றர் வரை வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

மேல் மாகாணத்திலும் காலி, மாத்தறை மாவட்டங்களிலும் சிறிதளவில் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

கடற்றொழிலில் ஈடுபட வேண்டாம்
மன்னாரிலிருந்து காங்கேசந்துறை, திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு ஊடாக பொத்துவில் வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட ஆழம் கூடிய மற்றும் ஆழம் குறைந்த கடற்பரப்புகளிலும் தென்மேற்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளிலும் கடலில் பயணம் செய்வோரும் மீனவ சமூகமும் மறு அறிவித்தல் வரை நடவடிக்கைகளில் ஈடுபடுவதைத் தவிர்த்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகின்றார்கள்.

காங்கேசந்துறையிலிருந்து திருகோணமலை, மட்டக்களப்பு ஊடாக பொத்துவில் வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளில் கடல் அலைகள் 2.5 – 3.5 மீற்றர் உயரம் வரை மேலெழும்பக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

கடலில் பயணம் செய்வோரும் மீனவ சமூகமும் இவ்விடயம் தொடர்பாக வளிமண்டலவியல் திணைக்களத்தால் வழங்கப்படும் எதிர்கால ஆலோசனைகள் தொடர்பாக அவதானமாக இருக்குமாறு வேண்டிக் கொள்ளப்படுகிறீர்கள்.

05N - 15N மற்றும் 80E - 88E கடல் பகுதிகளில் காற்றின் உச்சபட்ச வேகம் மணிக்கு (70-90) கி.மீ. ஆகவும் அது மணிக்கு 100 கி.மீ. வேகத்தில் அதிகரிக்கவும் வாய்ப்பு காணப்படுகின்றது.

மேற்கூறிய கடற்பரப்புகளில் பலத்த மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் என்பதோட, கடல் மிகக் கொந்தளிப்பாகவும் கடல் அலை உயர்வடையவும் வாய்ப்பு காணப்படுகின்றது.


எங்களது குரூப்பில் இணைந்து உலகில் இடம் பெறுகின்ற முக்கியச் செய்திகளைநம்பகத்தன்மையுடன் அறிந்து கொள்ளுங்கள்...

https://chat.whatsapp.com/CdQrB2OOcuB80nQg6k4iDh

Post a Comment

0 Comments