Trending

6/recent/ticker-posts

Header Ads Widget

377 ஆசனங்களைப் பெற்று பா.ஜ.க மீண்டும் ஆட்சியமைப்பது உறுதியா..?


காங்கிரஸ் தலைமையிலான 'இந்தியா' கூட்டணிக்கு 94 ஆசனங்கள் மாத்திரமே கிடைக்கும்!

இந்தியாவில் இந்த ஆண்டு நடைபெறவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் பிரதமர் நரேந்திர மோடிக்கு ஆதரவான புயல் வலுவாக வீசும் என்று பெரும்பாலான கருத்துக் கணிப்புகள் கூறுகின்றன. இந்தியாவில் நடைபெறவிருக்கின்ற நாடாளுமன்றத்…

இந்தியாவில் இந்த ஆண்டு நடைபெறவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் பிரதமர் நரேந்திர மோடிக்கு ஆதரவான புயல் வலுவாக வீசும் என்று பெரும்பாலான கருத்துக் கணிப்புகள் கூறுகின்றன.

இந்தியாவில் நடைபெறவிருக்கின்ற நாடாளுமன்றத் தேர்தல் தொடர்பாக பல நிறுவனங்கள் கருத்துக் கணிப்புகளை வெளியிட்டு வருகின்றன.

‘ஸி நியூஸ்’ நிறுவனம் நடத்திய கருத்துக்கணிப்பின் போது பாரதீய ஜனதா கட்சி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 377 இடங்களை வென்றெடுக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

MATRIZE அமைப்புடன் இணைந்து ‘ஸி நியூஸ்’ நிறுவனம் தேர்தல் கருத்துக்கணிப்பு ஒன்றை மேற்கொண்டது. இதில் பா.ஜ க சொல்வதுபோல, அந்தக் கட்சி தலைமையிலான NDA கூட்டணிக்கு 400 தொகுதிகள் கிடைக்கப் போவதில்லை. ஆனால், 370 தொகுதிகளைக் கைப்பற்றக் கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அண்மைய கணக்கெடுப்பின்படி, நாடு முழுவதும் உள்ள 543 நாடாளுமன்றத் தொகுதிகளில் 377 இடங்களில் என்.டி.ஏ கூட்டணிக்கு சாதகமான அலை வீசுவது தெரிகிறது. ஆனால், இந்தத் தேர்தலில் பின்னைடவைச் சந்திக்கும் காங்கிரஸ் தலைமையிலான ‘இந்திய கூட்டணி’ 94 இடங்களை மட்டுமே கைப்பற்றும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.



இந்தியா முழுவதும் தேர்தல் களைகட்டி விட்டது. அனைத்துக் கட்சிகளும் தங்களின் முழு பலத்தையும் ஒன்றிணைத்து தேர்தல் வியூகங்கள் அமைத்து வருகின்றன. இதற்கிடையில், அரசியல் வியூகங்களும் கருத்துக் கணிப்புகளும் ஏற்கனவே தொடங்கி விட்டன.

தேர்தல் திகதி அறிவிக்கப்படுவதற்கு முன்னதாக, எந்தக் கட்சிக்கு தேர்தல் களம் சாதகமாக இருக்கிறது என்ற கணிப்பை MATRIZE மற்றும் ஸீ நியூஸ் இணைந்து நடத்தின. இதில் பா.ஜ.க தலைமையிலான என்.டி.ஏ கூட்டணிக்கு மக்களின் ஆதரவு அதிகரித்திருப்பதாகக் கூறப்பட்டுள்ளது.

கருத்துக் கணிப்பு நடத்தப்பட்ட காலகட்டம் சமீபமானது என்பதால் நரேந்திர மோடி தலைமையிலான பா.ஜ.க மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றுவது உறுதியாகத் தென்படுவதாக அரசியல் ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

இந்தக் கருத்துக்கணிப்பின் போது மக்களவையின் 543 தொகுதிகள் குறித்து 1,67,843 பேரிடம் இருந்து கருத்துக்கள் பெறப்பட்டன. 87 ஆயிரம் ஆண்களும், 54 ஆயிரம் பெண்களும் கலந்து கொண்ட கருத்துக்கணிப்பில் 27 ஆயிரம் முதல்முறை வாக்காளர்களின் கருத்துகளும் இடம்பெற்றுள்ளன.

கருத்துக்கணிப்பு முடிவுகளைப் பொறுத்தவரை இதில் 2 சதவீதம் அதிகரிக்கவோ அல்லது குறையவோ செய்யலாம். இது பொதுமக்களின் தேர்தல் தொடர்பான கருத்துக்கள் ஆகும். யார் வெற்றி பெறலாம் என்ற மக்களின் மனோநிலையை பிரதிபலிக்கும் ஊகங்களே ஆகும்.

ஸீ நியூஸ் மேட்ரிஸின் கருத்துக் கணிப்பின்படி, தமிழகத்தில் தி.மு.க தலைமையிலான கூட்டணிக்கு 36 இடங்களில் வெற்றி கிடைக்கலாம் என்றும், தேசிய ஜனநாயகக் கூட்டணி ஒரு தொகுதியில் கால் பதிக்கலாம் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.

இந்தியாவின் முழு வடகிழக்கிலும் தேசிய ஜனநாயக கூட்டணியின் செல்வாக்கு இருக்கும் என்று கருத்துக் கணிப்புகள் சொல்கின்றன.

அஸ்ஸாமின் புள்ளிவிவரங்கள் பா.ஜ.கவுக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கின்றன. 14 நாடாளுமன்றத் தொகுதிகளில் 11 இல் தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெற வாய்ப்புள்ளது.

Zee News Matriz இன் கருத்துக்கணிப்பின்படி, நாடாளுமன்றத் தேர்தல் 2024, வடகிழக்கில் என்.டி.ஏவுக்கு 10 இடங்களையும், I.N.D.I.A. கூட்டணிக்கு 1 இடம் பெற்றுக் கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேசமயம் அசாமில் என்.டி.ஏ 11 இடங்களை வென்றெடுக்கும். ஐ.என்.டி.ஐ.ஏ. கூட்டணிக்கு 1 இடம் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சண்டிகார், அந்தமான், கோவா மற்றும் தாத்ரா-நகர் ஹவேலியில் இந்திய கூட்டணிக்கு பெரிய அளவில் வெற்றி வாய்ப்பு இருக்காது என்று கூறப்படுகிறது. கருத்துக்கணிப்பின்படி, சண்டிகர், அந்தமான், கோவா மற்றும் தாத்ரா-நகர் ஹவேலி ஆகிய இடங்களில் தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெறும் என கணிக்கப்பட்டுள்ளது.

Zee News Matriz கருத்துக்கணிப்பின்படி, லடாக்கில் NDA வெற்றி பெறலாம், லட்சத்தீவில் I.N.D.I.A வெற்றிபெறும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

இவ்வாறான கருத்துக் கணிப்புகள் வெளியாகியுள்ள நிலையில் பா.ஜ.க ஆட்சி செய்யாத மாநிலங்களின் நிலை என்ன என்பது குறித்தும் ஆராய வேண்டியுள்ளது.

நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில், இந்தியா முழுதும் அனைத்துக் கட்சிகளும் தேர்தலுக்குத் தயாராகி வருகின்றன. பா.ஜ.கவை வீழ்த்த 25 இற்கும் மேற்பட்ட கட்சிகள் ஒன்றிணைந்து இந்தியா கூட்டணி உருவாகியுள்ளது. மேலும் ஒவ்வொரு மாநிலத்திலும் உள்ள கட்சிகள் கூட்டணி பேச்சுவார்த்தையை தொடங்கி வருகின்றன.

மக்களவைத் தேர்தலுக்கான திகதி எவ்வேளையிலும் அறிவிக்கப்பட வாய்ப்புள்ளது. இதனைத் தொடர்ந்து மக்களவைத் தேர்தல் ஏப்ரல் 2- ஆவது வாரம் முதல் மே 2- ஆவது வாரம் வரை பல்வேறு கட்டங்களாக நடத்தப்படும் என அரசியல் வல்லுநர்கள் கணிப்புகளை வெளியிட்டு வருகின்றனர். இதற்கான பணிகளில் இந்திய தேர்தல் ஆணையம் தீவிரமாக ஈடுபட்டுள்ளது. அனைத்து அரசியல் கட்சிகளும் மக்களவைத் தேர்தலை எதிர்கொள்ள தீவிரம் காட்டி வருகின்றன.

குறிப்பாக கூட்டணிப் பேச்சுவார்த்தையை இறுதிசெய்து, தொகுதி பங்கீட்டை முடிவு செய்யும் பணியில் அரசியல் கட்சிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளன. மத்தியில் பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியும், காங்கிரஸ் தலைமையிலான INDIA – கூட்டணியும் நேருக்கு நேர் மோதுகின்றன. தமிழகத்தைப் பொறுத்தவரை INDIA கூட்டணி தி.மு.க தலைமையில் களம் இறங்குகிறது.

இந்த நிலையில் ‘மூட் ஒப் தி நேஷன்’ என்ற தலைப்பில் ‘இந்தியா டுடே’ மற்றும் ‘சி வோட்டர்ஸ்’ இணைந்து இந்தியா முழுவதும் கருத்துக்கணிப்பு நடத்தியிருக்கிறது. இதன்படி கடந்த ஆண்டு டிசம்பர். 15 முதல் 2024 ஜனவரி 28 வரை 35,801 பேரிடம் கருத்துக் கேட்கப்பட்டிருக்கிறது. இதன்படி முடிவுகள் வெளியாகியுள்ளன.

‘சி-வோட்டர்ஸ்’ வெளியிட்டுள்ள கருத்துக் கணிப்பு முடிவுகளின்படி பெரும்பான்மை இடங்களை பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி பெறும் என்பது தெளிவாகியுள்ளது. இதன்படி மொத்தமாக 301 இடங்களை தேசிய ஜனநாயக கூட்டணி மற்றும் 71 இடங்களை இந்தியா கூட்டணி பிடிக்க வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது.

நன்றி...
தினகரன்

Post a Comment

0 Comments