Trending

6/recent/ticker-posts

Live Radio

ஈரானில் நீடிக்கும் போராட்டம் பலியானோர் எண்ணிக்கை 500 ஐ கடந்தது ...!



ஈரானில் கடந்த இரண்டு வாரங்களாக நீடித்து வரும் மக்கள் எழுச்சியில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 500 ஐக் கடந்துள்ளதாக மனித உரிமை அமைப்புகள் தெரிவித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அதேவேளை, அமெரிக்கா தலையிட்டால் இஸ்ரேல் மற்றும் அமெரிக்க இராணுவத் தளங்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் என ஈரான் பகிரங்கமாக எச்சரித்துள்ளது.

அமெரிக்காவைத் தளமாகக் கொண்ட HRANA அமைப்பு வெளியிட்டுள்ள தரவுகளின்படி, 490 போராட்டக்காரர்கள் மற்றும் 48 பாதுகாப்புப் படையினர் கொல்லப்பட்டுள்ளதுடன், 10,600 க்கும் அதிகமானோர் சிறைபிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

போராட்டங்களைத் தடுக்க வியாழக்கிழமை முதல் ஈரான் முழுவதும் இணையச் சேவை துண்டிக்கப்பட்டுள்ளது.

இதனைச் சரிசெய்ய ஈலோன் மாஸ்க்கின் 'ஸ்டார்லிங்க்' சேவையைப் பயன்படுத்துவது குறித்து ஆலோசிப்பதாக ஜனாதிபதி ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், ஈரானியப் போராட்டக்காரர்களுக்கு ஆதரவாக இராணுவத் தாக்குதல், கூடுதல் தடைகள் உள்ளிட்ட "கடுமையான தெரிவுகள்" பரிசீலனையில் உள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

இதற்குப் பதிலளித்துள்ள ஈரான் நாடாளுமன்ற சபாநாயகர் முகமது பாகர் காலிபாப், "அமெரிக்கா தவறுதலாகத் தாக்கினால், இஸ்ரேல் (ஆக்கிரமிக்கப்பட்ட பகுதிகள்) மற்றும் பிராந்தியத்தில் உள்ள அனைத்து அமெரிக்கக் கப்பல்களும் தளங்களும் எமது இலக்குகளாக மாறும்," என எச்சரித்துள்ளார்.

டிசம்பர் 28 அன்று விலைவாசி உயர்வுக்கு எதிராகத் தொடங்கிய போராட்டம், தற்போது 1979 இஸ்லாமியப் புரட்சிக்குப் பிந்தைய ஆட்சிக்கு எதிரான எழுச்சியாக மாறியுள்ளது.

ஜனாதிபதி மசூத் பெசெஷ்கியான், இந்த வன்முறைகளுக்குப் பின்னால் அமெரிக்காவும் இஸ்ரேலும் இருப்பதாகக் குற்றம் சாட்டியுள்ளார்.

அத்துடன், திங்கட்கிழமை நாடு தழுவிய கண்டனப் பேரணிக்கு அரசாங்கம் அழைப்பு விடுத்துள்ளது.

"அமெரிக்கா மற்றும் சீயோனிச ஆட்சிக்கு எதிரான போராட்டத்தில் கொல்லப்பட்ட தியாகிகளுக்காக" மூன்று நாட்கள் தேசிய துக்க தினம் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஐநா பொதுச்செயலாளர் அந்தோனியோ குட்டரெஸ், வன்முறைச் செய்திகளால் தான் அதிர்ச்சியடைந்துள்ளதாகக் கூறியதுடன், அமைதியாகப் போராடும் உரிமையை மதிக்குமாறு ஈரானைக் கேட்டுக்கொண்டார்.

2025 ஜூன் மாதம் ஈரானுடன் 12 நாட்கள் போர் புரிந்த இஸ்ரேல், தற்போது அமெரிக்காவின் தலையீடு இருக்கலாம் என்ற எதிர்பார்ப்பில் தனது படைகளை அதீத தயார் நிலையில் வைத்துள்ளது.

வெளிநாடுகளில் தங்கியுள்ள ஈரானிய எதிர்க்கட்சித் தலைவர்கள், மக்கள் வீதிக்கு வந்து தொடர்ந்து போராடுமாறு அழைப்பு விடுத்துள்ளனர்.

ஈரானிய உயரதிகாரிகள் இன்னும் ஒற்றுமையாக இருப்பதால், இந்தப் போராட்டங்களால் தற்போதைய ஆட்சி கவிழுமா என்பது குறித்து அரசியல் ஆய்வாளர்கள் மத்தியில் மாறுபட்ட கருத்துக்கள் நிலவுகின்றன.

Post a Comment

0 Comments