
ஹமாஸ் - இஸ்ரேல் போர் நிறுத்த ஒப்பந்தம் 3 மணி நேர தாமதத்துக்குப் பின்னர் அமுலுக்கு வந்துள்ளது. 15 மாதங்களாக நடந்துவந்த போர் முடிவுக்கு வந்துள்ளது. நிபந்தனைகள் இருந்தாலும் கூட இந்தப் போர் நிறுத்த ஒப்பந்தம் பல தரப்பிலும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
இஸ்ரேலிய நேரப்படி இன்று (19) காலை 8.15 மணிக்கே அமுலுக்கு வர வேண்டிய போர் நிறுத்தம் 3 மணி நேரம் தாமதமானது. இதனால் மக்கள் பதற்றமடைந்தனர். தற்போது போர் நிறுத்தம் காசா மக்களுக்கு நிம்மதியை அளித்துள்ளது.
ஹமாஸால் விடுவிக்கப்பட வேண்டிய பணயக் கைதிகளின் பெயர்ப் பட்டியலை அவர்கள் வெளியிடாததால் போர் நிறுத்த ஒப்பந்தத்தை அமுல்படுத்தாமல் நிறுத்தி வைத்துள்ளதாக இஸ்ரேல் தெரிவித்திருந்தது. தொடர்ந்து தாக்குதல் நடத்துவதாகவும் கூறியிருந்தது. இதனால் பதற்றம் ஏற்பட்டது.
இதனிடையே இஸ்ரேல் இராணுவத்தின் செய்தித் தொடர்பாளர் ரியர் அட்மிரல் டேனியல் ஹகாரி கூறுகையில், "ஞாயிற்றுக்கிழமையின் பிற்பகுதியில் விடுவிக்கப்பட வேண்டிய பிணைக் கைதிகளின் பெயர் பட்டியலை ஹமாஸ் ஒப்படைக்கும் வரை போர் நிறுத்தம் தொடங்காது எனக் கூறினார்.
இதனிடையே, சனிக்கிழமை (18) தனது எக்ஸ் பக்கத்தில் பதிவொன்றை வெளியிட்டிருந்த இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, “ஒப்புக்கொண்டபடி, விடுவிக்கப்பட வேண்டிய பிணைக் கைதிகளின் பெயர் பட்டியல் கைக்கு வரும் வரை நாங்கள் போர் நிறுத்தத்தில் சிறிதும் முன்னேற மாட்டோம். ஒப்பந்த மீறல்களை இஸ்ரேல் பொறுத்துக்கொள்ளாது. அதற்கான முழுப் பொறுப்பும் ஹமாஸிடம் உள்ளது.” என்று தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், விடுவிக்கத் தயாராக உள்ள மூன்று பெண் பணயக் கைதிகளின் பெயர்களை ஹமாஸ் வெளிட்டதைத் தொடர்ந்து இஸ்ரேல் - ஹமாஸ் போர் நிறுத்த ஒப்பந்தம் அமுலுக்கு வந்துள்ளது. மூன்று மணி நேர தாமதத்துக்கு பின்பு இந்த போர் நிறுத்தம் இஸ்ரேலிய நேரப்படி முற்பகல் 11.15 மணிக்கு அமுலுக்கு வந்துள்ளது.
இந்த போர் நிறுத்தத்தின் முதல் கட்டம் 42 நாட்கள்வரை நீடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தநிலையில் பெயர் பட்டியலை ஒப்படைப்பதில் ஏற்பட்ட தாமதத்திற்கு தொழில்நுட்ப கோளாறே காரணம் என்று கூறியுள்ள ஹமாஸ் அமைப்பு கடந்த வாரம் ஏற்பட்ட போர்நிறுத்தத்தில் தாங்கள் உறுதியாக இருப்பதாகவும் தெரிவித்தது.
அமெரிக்க மற்றும் கட்டார் நாடுகளின் முயற்சியால் இஸ்ரேல் - ஹமாஸ் போர் நிறுத்த ஒப்பந்தத்தின் படி, ஹமாஸால் கடத்தப்பட்ட 250 பணயக் கைதிகளில் தற்போது உள்ள 98 பேரில் 33 பேர் விடுவிக்கப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல் இஸ்ரேலின் பல்வேறு சிறைகளில் இருக்கும் 2000 பலஸ்தீனியர்களையும் இஸ்ரேல் விடுவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
0 Comments